தெரியாமல் சுட்டு விட்டேன்.. வாசிம் அக்ரமை சுட்டவர் மன்னிப்பு கேட்டார்!
கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கியால் சுட்டவர் அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு அக்ரமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட நபர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். சில வாரங்களுக்கு முன்பு கராச்சியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்திற்குத் தனது காரில் அக்ரம் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் அவரது காருடன் மோதி விட்டது.
இதையடுத்து அக்ரமுக்கும், காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர் அக்ரமை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக தோட்டா அக்ரமின் காரில் பட்டதால் அக்ரம் தப்பினார்.

தவறுதலாக நடந்தது:
அந்த நபர் பின்னர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் அமிருல் ரெஹ்மான் எனத் தெரியவந்தது. தற்போது அக்ரமிடம் அந்த நபர் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் அக்ரமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புரிந்து கொள்ளாமல் நடந்த சம்பவம்:
அதில், ரெஹ்மான் கூறுகையில், இது தவறுதலாக நடந்து விட்டது. சரியாக புரிந்து கொள்ளாமல் நடந்த சம்பவம்.

மன்னிப்பு கோருகின்றேன்:
இந்த சோகமான சம்பவத்திற்கு நான் முதலில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும் எனது குடும்பமும் உங்களது தீவிர விசிறிகள். உங்களை நான் சுட்டதற்கு எனது வீட்டிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. உங்களுக்கு ஆதரவாகவே எனது குடும்பத்தினர் பேசி உள்ளனர்.

எங்கள் தேசிய ஹீரோ:
நீங்கள் எங்களது தேசிய ஹீரோ. எங்களது பெருமை. உங்களுடன் சண்டை போடுவதை நான் நினைத்துக் கூட பார்க்க முடியாது. தவறாக நடந்து விட்ட சம்பவம் அது. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் ரெஹ்மான்.












Click it and Unblock the Notifications