ஈழத் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி மரணம்
லண்டன்: மறைந்த ஈழத் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் மரணமடைந்தார்.
ஈழ அரசியலில் முக்கியத் தலைவர் அமிர்தலிங்கம். தமிழர் விடுதலைத் கூட்டணியின் தலைவராக திகழ்ந்தவர். இவரது மனைவி மங்கையர்க்கரசி. 82 வயதான அவர் லண்டனில் தனது மகன் டாக்டர் பாகீரதனுடன் வசித்து வந்தார்.
கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் தராமல் மரணமடைந்தார் மங்கையர்க்கரசி.
தனது கணவருடன் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டவர் மங்கையர்க்கரசி. 1960ம் ஆண்டு நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
தமிழர்கள் மத்தியில் பாடல்கள் பாடியும், உணர்ச்சிகரமாக பேசியும் தனது கணவருடைய அரசியல் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த வந்தார். கணவரைப் போலவே தானும், இந்தியத் தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருடன் நல்லுறவைப் பேணி வந்தவர்.
கருணாநிதி இரங்கல்:
மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தின் மறைவு குறித்து திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும், இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நாவலர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி நேற்றிரவு லண்டன் மாநகரில் மறைந்து விட்டார் என்ற செய்தியினை இன்று காலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொலைபேசி வாயிலாகத் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன்.
கணவரும் மனைவியுமாக அந்தக் காலத்தில் என்னைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவலர் அமிர்தலிங்கம் இலங்கையில் கொல்லப்பட்ட பிறகு, அம்மையார் அந்த நாட்டிலிருந்தே வெளியேறி தமிழகத்திலும், லண்டனிலும் வாழ்ந்து வந்தார்.
தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் என்னைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துச் செல்வார். அம்மையாரின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.