தே.பா. சட்டம்: பத்திரிகையாளர் கிஷோர் சந்திராவை உடனடியாக விடுவிக்க மணிப்பூர் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
இம்பால்: மாட்டுச் சாணம் கொரோனாவை குணமாக்காது என்ற ஃபேஸ்புக் பதிவுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கெம்சாவை இன்று மாலை 5 மணிக்குள் விடுதலை செய்ய மணிப்பூர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோன்ற பேஸ்புக் பதிவுக்காக ஏற்கனவே சமூக ஆர்வலர் எரன்ட்ரோவை 2 நாட்களுக்கு முன்னர் உடனே விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மணிப்பூர் மாநில பாஜக தலைவராக இருந்த கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அப்போது சமூக ஆர்வலர் எரன்ட்ரோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில், மாட்டு சாணம், கோமியம் ஆகியவை கொரோனாவை ஒருபோதும் குணப்படுத்தாது என பதிவிட்டிருந்தார்.
இதேபோல் பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கெம்சாவும், மாட்டு சாணம், கொரோனாவை குணப்படுத்தாது- அறிவியலுக்கு புறம்பானவற்றை மக்களுக்கு கற்பிக்கக் கூடாது என ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார். இது தொடர்பாக எரன்ட்ரோ, கிஷோர் சந்திரா ஆகியோர் மீது பாஜக த்லைவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

தேசிய பாதுகாப்பு சட்டம்
இந்த வழக்கில் எரன்ட்ரோவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால் ஜாமீனில் எரன்ட்ரோவை விடுதலை செய்யாமல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் கிஷோர் சந்திரா மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இதனை எதிர்த்து எரன்ட்ரோ சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், சமூக வலைதளங்களில் மத்திய, மாநில அரசுகளை விமர்சிப்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

உடனே விடுவிக்க உத்தரவு
இந்த மனுவை கடந்த 19-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா, எரன்ட்ரோவை ரூ1,000 பிணையில் மாலை 5 மணிக்குள் விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவின் அடிப்படையில் எரன்ட்ரோ உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

மணிப்பூர் ஹைகோர்ட் அதிரடி
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கோள்காட்டி தமது கணவர் கிஷோர் சந்திராவையும் விடுதலை செய்ய வேண்டும் என அவரது மனைவி ரஞ்சிதா, மணிப்பூர் மாநில அரசுக்கும் அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் மனு கொடுத்திருந்தார். இம்மனுவை ஏற்று கிஷோர் சந்திராவை இன்று மாலை 5 மணிக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications