அமெரிக்க தேர்தல் களத்தில் இந்தியர்கள்.. வெற்றி பெற்று பெருமை சேர்ப்பார்களா?
வாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று காலை 10.30 மணிவரை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அமெரிக்காவில், அதிபர் தேர்தலுடன் சேர்ந்து, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கும் தேர்தல் நடக்கிறது. போலவே, பல்வேறு மாகாண சட்டசபை மற்றும் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தல்களில், அங்கு குடியுரிமையும், ஓட்டுரிமையும் பெற்று வசித்து வரும் ஏராளமான இந்தியர்கள், அரசியல் கட்சிகளில் இணைந்து போட்டியிடுகின்றனர். இதில் பெரும்பாலானோர் ஹிலாரியின், ஜனநாயக கட்சி சார்பிலேயே வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
பிரதிநிதிகள் சபைக்கு, கலிபோர்னியா சிலிகான் வேலி பகுதியில் இருந்து, அங்கு, எம்.பி.யாக பதவி வகிக்கும் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட, அமி பெரா மீண்டும் போட்டியிடுகிறார்.
கலிபோர்னியாவின் மற்றொரு தொகுதியில் ரோஹித் கன்னா போட்டியிடுகிறார். மலையாளியான பீட்டர் ஜேக்கப், நியூஜெர்சியில் போட்டியிடுகிறார். மும்பையை பூர்வீகமாக கொண்ட, டாக்டர் அனில் குமார் டெட்ராய்டிலும், ஹவாயில், துளசி கபார்டும் போட்டியிடுகிறார்கள்.
மாகாண சட்டசபை தேர்தல்களில், கலிபோர்னியாவில், ஆஷ் கல்ராவும், பென்சில்வேனியாவில், நீல் மஹிஜா, வடக்கு கரோலினாவில், ஜெய் சவுத்திரியும், ஒஹியோவில், நீரஜ் ஆண்டனியும், கனெக்ட்கட்டில், பிரசாத் ஸ்ரீநிவாசனும், டெட்ராய்ட்டில், செய்யது தாஜும் போட்டியிடுகின்றனர்.
கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ், செனட் சபை, எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். சியாட்டில் பகுதியில் இருந்து, பிரதிநிதிகள் சபைக்கு, பிரமிளா ஜெயபால். இவர்கள் இருவரின் பெற்றோரும், தமிழகத்தை அதிலும், சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இதே போல், தமிழகத்தை பூர்வீகமாக உடைய, ராஜா கிருஷ்ணமூர்த்தி, 42, சிகாகோவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications