இந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவு: 90க்கும் மேற்பட்டோர் பேர் கதி என்ன? 18 உடல்கள் மீட்பு!
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 90க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியா 17 ஆயிரம் தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு. இங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு ஆண்டு தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்படுகிறது.
தற்போது அங்கு பலத்த மழை கொட்டுகிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஜாவா தீவு நேற்று பெய்த மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜாவா மாகாணத்தில் உள்ள பஞ்சனேகரா மாவட்டம் மலைகளால் ஆனது. அங்கு நேற்று பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 105 வீடுகள் மண்ணில் புதைந்தன.
உடனே ராணுவவீரர்கள், போலீசார் மற்றும் கிராம மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 68 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே மண்ணில் புதையுண்டு உயிரிழந்த 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.. மேலும் 90க்கும் மேற்பட்டோரை பேரை காணவில்லை. அவர்களும் மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.