அனுப்பிய மெசேஜ்களை டெலிட் செய்த மார்க் ஜூக்கர்பெர்க்.. புதிய தவறுகளை ஒப்புக்கொண்ட பேஸ்புக்!
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பிய முக்கியமான பேஸ்புக் மெசேஜ்கள் டெலிட் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நியூயார்க்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பிய முக்கியமான பேஸ்புக் மெசேஜ்கள் டெலிட் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை மார்க் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
டெலிட் பண்ண முடியாது
பொதுவாக பேஸ்புக்கில் நாம் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை திரும்ப பெற முடியாது. எந்த வகையிலும் நமக்கு மட்டும் கூட அந்த மெசேஜை டெலிட் செய்ய முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக பேஸ்புக் நிறுவனம் இந்த வசதியை கொடுக்கவில்லை. இந்த மெசேஜ்களை பல குற்றங்களில் ஆதாரங்களாக காட்ட முடியும்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்
ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்கிற்கு மட்டும் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் பிறருக்கு அனுப்பும் பேஸ்புக் மெசேஜ்களை டெலிட் செய்ய முடியும் என்று ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர் இது போல நிறைய மெசேஜ்களை டெலிட் செய்து இருக்கிறார் என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது.
என்ன தொடர்பு
பேஸ்புக் நிறுவனர் மார்க், தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிலருக்கு பேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்பும் பழக்கத்தை கொண்டு இருக்கிறார். இதில் பல முக்கியமான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது. அவர் மற்ற சமூக வலைத்தளங்களை நம்பாத காரணத்தால் இப்படி பேஸ்புக் மூலம் மெசேஜ்களை அனுப்பி இருக்கிறார்.
ஒப்புக்கொண்டது
தற்போது இந்த மெசேஜ்கள்தான் டெலிட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வுக்கட்டுரையின் புகார் உண்மைதான் என்று மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார். மெசேஜில் அனுப்பப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் இந்த வசதியை தனக்கு மட்டும் ஏற்படுத்திக் கொண்டதாக புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.