ஸ்வீடன் சூப்பர் மார்க்கெட்டில் டிரக் ஏறி 3 பேர் பலி: 8 பேர் படுகாயம் ; தீவிரவாதிகள் தாக்குதலா?
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப் பகுதியிலுள்ள அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேகமாக டிரக் ஒன்று மோதியது. இதில் 3 பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர்.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் உள்ள டிராட்டிங்ஹாட்டன் என்ற பகுதியில் ஏராளமான மால்கள், சூப்பர் மார்கெட்டுகள் உள்ளன. எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் இந்த பகுதியில் இன்று டிரக் ஒன்று அதிவேகமாக மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
மக்கள் அலறி அடித்து ஓடியதில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். விபத்தா? அல்லது தீவிரவாத தாக்குதலா? என விசாரணை நடந்து வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி கண்டனம்
ஸ்வீடன், ஸ்டாக்ஹோம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: இந்த தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.மேலும் பலியான குடும்பத்தினருக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன். துயரமான இந்நேரத்தில் இருந்து சுவீடன் மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்று மோடி பதிவிட்டுள்ளார்.