உலகில் முதலில் தோன்றிய விலங்கு டைனோசர் இல்லையாம்.. அப்போ வேறு எது? மிரள வைக்கும் ஆய்வு முடிவுகள்
நியூயார்க்: நமது பூமி பல மர்மங்கள் நிறைந்தது. இந்த மர்மங்களுக்கு விடையைக் கண்டுபிடிக்கப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக முயல்கிறார்கள். இதற்காகப் பல்வேறு ஆய்வுகளும் கூட நடந்து வருகிறது. இதற்கிடையே உலகின் முதலில் தோன்றிய உயிரினம் என்ன என்பது குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர்.
நமது பூமியில் எப்போதும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். இன்று நாம் இருக்கும் பூமி, கடந்த காலங்களிலும் இப்படியே இருந்ததாகச் சொல்ல முடியாது. பெருவெடிப்புக்குப் பிறகு பூமியில் பல்வேறு மாற்றங்கள் நடந்த பிறகே நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம். முதலில் பூமியில் ஒரு செல் உயிரினம் தோன்றிய நிலையில், அதன் பிறகு பல கோடி ஆண்டுகளாகப் பூமி பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.

முதல் உயிரினம்
இதற்கிடையே பூமியில் தோன்றிய முதல் உயிரினங்கள் குறித்த புதிய சான்றுகளை அமெரிக்காவின் எம்ஐடி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நவீன கடல் பஞ்சுகளின் பண்டைய மூதாதையர்கள்தான் பூமியின் முதல் விலங்குகளாக இருந்திருக்கலாம் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதை டெமோஸ்பாஞ்ச் என்று அழைக்கிறார்கள். 'புரோசிடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்' என்ற இதழில் இது குறித்த ஆய்வுகள் வெளியாகி உள்ளது.
541 மில்லியன் ஆண்டுகளுக்கும் பழமையான பாறைகளில் ரசாயனப் படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தப் படிமங்கள் எடியக்காரன் காலத்தில் வாழ்ந்த டெமோஸ்பாஞ்ச் உயிரினங்களின் இருப்பை உறுதி செய்கின்றன. ரசாயனப் படிமங்கள் என்பவை கோடிக்கணக்கான ஆண்டுகளாக வண்டல்களில் பாதுகாக்கப்பட்ட, அழிந்துபோன உயிரினங்களின் எஞ்சிய தடயங்களாகும்.
டெமோஸ்பாஞ்ச்
இதில் ஆய்வாளர்கள் ஸ்டெரேன்கள் எனப்படும் ஒரு வகை மூலக்கூறுகளைக் கண்டறிந்தனர். இவை செல் சவ்வுகளில் அத்தியாவசியமானதாகும். இந்த ஸ்டெரேன்கள் டெமோஸ்பாஞ்ச்களுடன் தொடர்புடையவை. இன்று வாழும் மென்மையான உடல் கொண்ட கடல் பஞ்சுகளின் மூதாதையர்கள் இதுவாகும். இதை வைத்துப் பார்த்தால் டெமோஸ்பாஞ்ச் மூதாதையர்கள் தான் பூமியில் உருவான முதல் பலசெல் விலங்காக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நம்மில் சிலர் டைனோசர்கள் தான் உலகின் முதலில் தோன்றிய பல செல் உயிரினங்களாக இருக்கலாம் என நினைப்போம். ஆனால், உண்மை அப்படி இல்லை. இந்த டெமோஸ்பாஞ்ச் தோன்றி பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே டைனோசர்கள் தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆய்வு
மேற்கு இந்தியா மற்றும் சைபீரியாவில் இருந்து கிடைத்த பழங்காலப் பாறைகளை ஆய்வு செய்ததில் இந்த கெமிக்கல் மார்கர்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் லூப்னா ஷாவர் மற்றும் ஓமன் தெரிவித்தனர். அந்த கெமிக்கல் மார்கர்களில் 30 மற்றும் 31 கார்பன் அணுக்களைக் கொண்ட ஸ்டெரேன்கள் இருந்துள்ளன. இந்தப் பாறைகளை ஆய்வு செய்த போதுதான் டெமோஸ்பாஞ்ச் வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. சுமார் 541 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, கடலில் வாழும் மென்மையான உடல் கொண்ட பஞ்சுகளாக இவை இருந்துள்ளன.
என்ன பொருள்?
அதாவது இந்த டெமோஸ்பாஞ்ச் தான் உலகின் தோன்றிய முதல் பலசெல் உயிரினம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், முதலில் தோன்றிய ஒரு சில உயிரினங்களில் ஒன்றாக இது இருக்கலாம் என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது தொடர்பாகத் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து வரும் சூழலில் இதில் பல முக்கிய விஷயங்கள் தெரிய வரலாம்.












Click it and Unblock the Notifications