வேலூர் அருகே விண்கல் விழுந்து டிரைவர் சாகவில்லை: நாஸா மறுப்பு
வாஷிங்டன்: வேலூர் அருகே மர்ம பொருள் விழுந்து கல்லூரி பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவத்தில், திடீர் திருப்பமாக, அவர் சாக காரணமாக இருந்த பொருள், விண்கல் கிடையாது என்று நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் என்ற இடத்தில் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. கடந்த சனிக்கிழமை மதியம் வானத்தில் இருந்து திடீரென மர்ம எரிபொருள் ஒன்று கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்தது.
மர்ம பொருள் விழுந்ததில் அங்கு நின்றிருந்த கல்லூரி பஸ் டிரைவர் காமராஜ் (27) உடல் கருகி உயிரிழந்தார். தோட்டக்காரர்கள் சசிக்குமார் (36), முரளி (27) ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர்.

வெடிகுண்டு சந்தேகம்
முதலில் வெடிகுண்டு வெடிப்பு என சந்தேகிக்கப்பட்ட இந்த நிகழ்வு பின்னர், எரிகல் தாக்குதல் என சந்தேகிக்கப்பட்டது. இந்த சம்பவம் உலகமெங்கும் பரபரப்பை உருவாக்கியது.

ஆய்வு
பெங்களூரிலுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கற்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இதனிடையே, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு, அமெரிக்காவிலுள்ள நாசா விஞ்ஞானி, லிண்ட்லி ஜான்சன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: இதுவரை விண்கல் விழுந்து காயமடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன, எந்த மனிதரும் சாகவில்லை.

வரலாறு இல்லை
வன விலங்குகள் விண்கல் தாக்குதலால் உயிரிழந்த சம்பவங்கள் சில முறை நடந்துள்ளன. மனிதர்கள் யாரும் இறந்தது கிடையாது. விண்கல் விழுவது குறித்து விஞ்ஞானிகளுக்கு முன்கூட்டியே தெரியும். தமிழகத்தில் விண்கல் விழுவது குறித்து முன்கூட்டியே எதுவும் தெரியவில்லை.

மலை
மேலும், கைப்பற்றப்பட்ட கல்லை ஆன்லைனில் பார்க்க நேரிட்டது. அந்த கல், பூமியிலுள்ளதை போலத்தான் உள்ளது. மலையில் காணப்படும் கல்போலத்தான் அது காணப்படுகிறது. விண்கல் போல தென்படவில்லை. இவ்வாறு, அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications