குடும்பத் தகராறு.. மனைவியை பழிவாங்க 3 மகன்களை அடித்துக் கொன்ற தந்தை.. மெக்சிகோவில் கொடூரம்!
மெக்சிகோ: குடும்ப தகராறில் மனைவியை பழிவாங்குவதற்காக தனது மூன்று மகன்களை கொன்ற தந்தையை மெக்சிகோ போலீசார் கைது செய்துள்ளனர்.
'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என தமிழில் ஒரு சொலவடை உண்டு. கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பது இதற்கு பொருள். கோபம் எப்போதும் பேரழிவையே ஏற்படுத்தும்.
இதற்கு உதாரணமாகி இருக்கிறது மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்று. அந்நாட்டின் ஹிதல்கோ மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஹிதல்கோவில் வாழ்ந்து வரும் ஒரு தம்பதியிடையே கடுமையான சண்டை ஏற்பட்டிருக்கிறது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கொலை வரை சென்றுவிட்டது. மனைவியின் மீது கடும் கோபம் கொண்ட கணவன், அந்த பெண்ணை பழிவாங்குவதற்காக தனது மூன்று மகன்களை அடித்தே கொன்றுவிட்டார்.
மூன்று கொலைகளை செய்த அந்த நபர், சொனோரா மாநிலத்திற்கு தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை தேடி சென்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை மிகவும் மோசமாக பேசிய மனைவியை பழிவாங்குதற்காகவே மகன்களை அடித்து கொன்றதாக போலீசாரிடம் அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கொலையான சிறுவர்களுக்கு முறையே 3,7 மற்றும் 8 வயதாகிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாய்தகராறு சிறு பிள்ளைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.