தெற்கு இந்திய பெருங்கடலில் சீனா பார்த்த பொருள் விமானத்தின் இறக்கையா?
பெய்ஜிங்: தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா பார்த்ததாக கூறும் பொருள் மாயமான விமானத்தின் இறக்கையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது. விமானம் மாயமாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் அதற்கு என்ன ஆனது என்ற உறுதியான தகவல் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 2 பொருட்களை கண்டுபிடித்துள்ளதாகவும், அவை மாயமான விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து அதே தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 22 மீட்டர் நீளமும், 13 அகலமும் உள்ள பொருளை சீன செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து அனுப்பியதாக சீனா தெரிவித்தது.
சீன செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்தில் உள்ள பொருள் மாயமான விமானத்தின் இறக்கையாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய நேஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் பிளாக்லேண்ட் கூறுகையில்,
அந்த புகைப்படத்தில் உள்ள பொருளின் அளவை வைத்து பார்த்தால் அது போயிங் 777 விமானத்தின் இறக்கையாக இருக்கும் என்றார்.
மாயமான விமானம் போயிங் 777 ரக விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.