இன்றுடன் ஓராண்டு நிறைவு: மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன தான் ஆனது?
கோலாலம்பூர்: மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இருப்பினும் விமானம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் ராடாரில் இருந்து மாயமானது. அதன் பிறகு விமானம் எங்கு சென்றது அதற்கு என்ன ஆனது என்று தெரியாமல் நாட்கள் சென்றன.
பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசியா அறிவித்தது.

விபத்து
மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியது விபத்து என்றும், அதில் விமானத்தில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்றும் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

இல்லை
விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்றும், அதில் பயணித்தவர்கள் உயிருடன் இருப்பதாகவும் பயணிகளின் உறவினர்கள் இன்று வரை நம்பிக்கையுடன் உள்ளனர்.

சீனர்கள்
விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர்கள் சீனர்கள். சீன பயணிகளின் உறவினர்கள் கூறுகையில், தினமும் காலை எழும்போது இன்றாவது எங்களின் உறவினர்கள் வீடு திரும்ப மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.

விமானம் எங்கே?
ஆஸ்திரேலியா தலைமையில் பல நாடுகள் விமானத்தை கடலுக்கு அடியில் மாதக் கணக்கில் தேடி வருகின்றன. ஆனாலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. அதனால் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் தான் விழுந்ததா என்ற சந்தேகம் கூட பலருக்கு எழுந்துள்ளது.

பல காரணம்
விமானத்தை யாராவது சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும், தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்றும், விமானம் வெடித்துச் சிதறிவிட்டது என்றும், வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கலாம் என்றும் பல பேச்சுகள் கிளம்பின. ஆனால் அவை எதற்கும் ஆதாரம் இல்லை.

வியட்நாம்
விமானம் மாயமான அன்று பெரிய விமானம் ஒன்று வெடித்துச் சிதறியதை பார்த்ததாக வியட்நாமில் உள்ள எண்ணெய் கிணற்றில் பணிபுரியும் நபர் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன்
மலேசிய விமானத்தின் கேப்டன் ஜாஹரி அகமது குடும்ப பிரச்சனைகளால் அல்லாடி வந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்டதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மை
விமானத்திற்கு என்ன ஆகியிருக்கும் என்று பலரும் பலவிதமாக கூறி வருகின்றபோதிலும் உண்மையில் நடந்தது என்ன என்பது மட்டும் இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

தொடரலாமா?
மே மாத இறுதி வரை தெற்கு இந்திய பெருங்கடலில் தீவிரமாக விமானத்தை தேட உள்ளனர். அப்படியும் எதுவும் கிடைக்காவிட்டால் விமானத்தை தேடும் பணியை நிறுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளிடையே பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications