மாயமான மலேசிய விமான தேடல்: லா ரீயூனியன் தீவில் கரை ஒதுங்கிய மேலும் ஒரு விமான பாகம்
பாரீஸ்: பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இந்திய பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமானத்தின் மேலும் ஒரு பகுதி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது.
வால் பகுதி
பிரான்ஸின் கட்டுப்பாட்டில் 'இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீ யூனியன் தீவில்' (மொரீஷியஸுக்கு அருகே உள்ளது) கடந்த புதன்கிழமை விமானத்தின் வால் பகுதி ஒன்று கரை ஒதுங்கியது.
போயிங் 777
கரை ஒதுங்கிய வால் பகுதி ஆய்விற்காக பாரீஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் அந்த பாகம் போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது உறுதியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கதவு
இந்நிலையில் லா ரீயூனியன் தீவில் உள்ள புனித டெனிஸ் நகரின் தெற்கு பகுதியில் விமானத்தின் கதவு போன்ற பொருள் கரை ஒதுங்கியுள்ளது.
மலேசிய விமானம்
லா ரீயூனியன் தீவில் கரை ஒதுங்கியுள்ள விமான பாகங்கள் மற்றும் சூட்கேஸின் பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.