மாயமான மலேசிய விமானத்தை கடலுக்கு அடியில் தேடும் பணி செப்டம்பரில் மீண்டும் துவங்கும்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை கடலுக்குள் அடியில் தேடும் பணி வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்னைல்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்றும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் 26க்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து தேடியும் விமானத்தின் ஒரு பாகம் கூட இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையே கடலுக்குள் அடியில் சென்று விமானத்தை தேட ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தியும் பயனில்லை.
இந்நிலையில் கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணி வரும் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாயமான விமானத்தை தேடி வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குழுவின் தலைவரான ஆங்கஸ் ஹூஸ்டன் உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமான விசாரணைக் குழுவின் சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஆங்கஸ் உக்ரைனில் இருக்கும் நேரத்தில் மாயமான விமான தேடல் துணை ஒருங்கிணைப்பாளர் ஜுடித் ஜீல்கே தலைமையில் நடைபெறும். மாயமான மலேசிய விமானத்தை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.