ஷூமாக்கரின் ரசிகர்கள் கெட்ட செய்தியை கேட்க தயாராகுங்கள்: முன்னாள் எஃப் 1 டாக்டர்
பாரிஸ்: கோமாவில் இருக்கும் முன்னாள் பார்முலா நம்பர் ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் குறித்த சில வருத்தம் அளிக்கும் தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று முன்னாள் பார்முலா நம்பர் ஒன் தலைமை மருத்துவர் கேரி ஹார்ட்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பார்முலா நம்பர் ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து பாரிஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் கோமாவில் வைத்தனர்.'
தற்போது அவரை கோமாவில் இருந்து எழுப்ப முயன்று வருகின்றனர். ஆனால் ஷூமாக்கர் தொடர்ந்து கோமாவிலேயே உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் பார்முலா நம்பர் ஒன் தலைமை மருத்துவர் கேரி ஹார்ட்ஸ்டெய்ன் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது, ஷூமாக்கரை கோமாவில் இருந்து எழுப்ப அதிக காலம் எடுத்தால் அவர் குணமடைவது மிகவும் கடினம். அதனால் அவர் குறித்த மிகவும் கவலை அளிக்கும் செய்தியை கேட்க ரசிகர்கள் தயாராகுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.