கண்ணைத் திறந்து மூடினார் கோமாவில் உள்ள ஷூமேக்கர்.. !
பாரீஸ்: பனிச்சறுக்கின்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோமா நிலையில் பிரெஞ்சு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எப். 1 சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கருக்கு நினைவு மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கியுள்ளது.
அவர் கண்ணைத் திறந்து மூடுவதாகவும், டாக்டர்கள் சொல்வதை புரிந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஷூமேக்கரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
டாக்டர்கள் சொல்வதைப் புரிந்து கொண்டு ஷூமேக்கர் ரியாக்ட் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனிச்சறுக்கில் விபரீதம்
கடந்த டிசம்பர் மாதம் பிரான்சில் பனிச்சறுக்கில் ஈடுபட்டபோது ஷூமேக்கர் தவறி விழுந்தார். இதில் அவரது தலை பாறையில் மோதி அடிபட்டு பெரும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் அவர் கோமாவில் வீழ்ந்தார்.

தீவிர சிகிச்சை.. சின்ன முன்னேற்றம்
அவரது உயிரைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையை டாக்டர்கள் தொடங்கினர். இதன் காரணமாக தற்போது அவரது உடல் நிலையில் சின்ன அளவில் முன்னேற்றம் தெரியத் தொடங்கியுள்ளது. முதலில் அவரது உடலில் அசைவுகள் தெரிவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது டாக்டர்கள் சொல்வதை அவர் புரிந்து கொள்வதாகவும், அதற்கேற்ப ரியாக்ட் செய்வதாகவும், கண் சிமிட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் உற்சாகம்
அவருக்கு எடுக்கப்பட்ட பல்வேறு நரம்பியல் சோதனைகளில் இது தெரிய வந்ததாம். இதனால் ஷூமேக்கரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

முழுமையாக மீள்வது எப்போது
இருப்பினும் ஷூமேக்கர் எப்போது முழுமையாக கோமாவிலிருந்த மீள்வார் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது. அதற்கு பல காலமாகும் என்றும் டாக்டர்கள் கூறுவதாக பிரெஞ்சுப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து கோமாவில்தான் இருக்கிறார் ஷூமேக்கர் என்றும் சின்னச் சின்ன அசைவுகளே அவரிடமிருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாகும்
கண்ணைத் திறந்து மூடுவதாகவும், உடலில் சின்னச் சின்ன அசைவுகள் இருப்பதுமே தற்போதைக்கு ஷூமேக்கரிடமிருந்து வந்துள்ள முன்னேற்றமாகும்.












Click it and Unblock the Notifications