வேலையை காட்டிய மைக்ரோசாப்ட்.. 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது! காரணத்தை பாருங்க
வாஷிங்டன்: டெக் நிறுவனங்கள் லேஆஃப் செய்வதை இயல்பாக்கி வருகின்றன. அந்த வகையில், தற்போது மைக்ரோசாப்ட் சுமார் 6,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பணி நீக்கம் ஆயிரக்கணக்கான ஊழியர்களையும், அவர்களை நம்பியுள்ள குடும்பங்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது.

எவ்வளவு பேர்?
6,000 ஊழியர்கள் என்பது மைக்ரோசாஃப்ட்டின் மொத்த ஊழியர்களில் சுமார் 3% ஆகும். கடந்த 2023ம் ஆண்டு இதேபோல 10,000 ஊழியர்களை இந்நிறுவனம் வேலையை விட்டு அனுப்பியிருந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு செய்துள்ள பணி நீக்கம்தான் மிக அதிகம். இத்தனைக்கும் 2024-2025 கடைசி காலாண்டில், அதாவது இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் வரை மூன்று மாதங்களில் இந்நிறுவனத்தின் லாபம் எதிர்பார்ப்புகளை விட அதிகமாகத்தான் இருந்திருக்கிறது.
லாபம் இருந்தும் வேலை நீக்கம்
70.1 பில்லியன் டாலர் வருவாயையும் 25.8 பில்லியன் டாலர் நிகர வருமானத்தையும் பெற்றிருப்பதாக நிறுவனம் அறிவித்திருந்தது. லாபமும் வந்துருச்சு, தொழில் சுணக்கம் ஏதும் கிடையாது. அப்படி இருந்தும் எதுக்கு இந்த லேஆஃப்? என்கிற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பியுள்ளனர்.
நிறுவனம் கூறுகையில், "மாறி வரும் சந்தை நிலையில் வெற்றிபெறவும், நிறுவனத்தை சிறப்பாக நிலை நிறுத்தவும் தேவையான மாற்றங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அதேபோல தலைமை நிதி அதிகாரி ஆமி ஹூட் கூறுகையில், "உயர் செயல்திறன் கொண்ட அணிகளையும், குறைவான மேனேஜர்களையும் கொண்ட சுறுசுறுப்பான டீமை நாங்கள் உருவாக்கி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
சப்பைக்கட்டு
தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டிருக்கும் போட்டியை சமாளிக்க, நிறுவனம் செயற்கை நுண்ணறிவை நோக்கி கவனம் செலுத்தி வருவதாக கூறும் மைக்ரோசாப்ட் அதிகாரிகள், எல்லா நிறுவனங்களிலும்தான் லேஆஃப் நடக்கிறது. நாங்கள் மட்டும் இதை செய்யவில்லை என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்கள். இந்த முறை லேஆஃப்பில் அதிகமாக பாதிக்கப்பட்டது வாஷிங்டன்தான். ரெட்மண்டில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் 1,985 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். மற்ற அலுவலகங்களில் இந்த எண்ணிக்கை குறைவுதான்.
யாரெல்லாம் லேஆஃப்?
இப்படி வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலோர் மென்பொருள் பொறியியல் அல்லது தயாரிப்பு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த பணி நீக்கம் மைக்ரோசாஃப்டின் வீடியோ கேமிங் தளமான எக்ஸ்பாக்ஸ் மற்றும் அதன் தொழில் நெட்வொர்க்கிங் தளமான லிங்க்ட்இன் ஆகியவற்றை பாதிக்கும் என்று அசோசியேட் பிரஸ் எனும் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் சிக்கல்
2024 நிலவரப்படி நிறுவனத்தில் மொத்தம் 2,28,000 பேர் முழு நேர ஊழியர்களாக இருந்தனர். இதில் 55% பேர் அமெரிக்காவில் இருந்தனர். எனவே பணி நீக்கம் என்று வந்துவிட்டால் இயல்பாகவே, அமெரிக்காவில் இருப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த பணி நீக்கம் பற்றி பொருளாதார நிபுணர் டேனியல் ஜாவோ கூறுகையில்,
காரணம் இதுதானா?
"சந்தையில் போராடிக்கொண்டிருக்கும் நிறுவனங்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கைதான் லேஆஃப் என்று பலரும் நினைக்கலாம். இது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் இது மட்டுமே முழு காரணம் கிடையாது. கோவிட் -19 தொற்றுக்கு பிறகு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் யுக்திகளை மாற்றியமைத்தன. அதன் பின்னர் ஏராளமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர். இப்படி வந்தவர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. தங்கள் நடவடிக்கையிலிருந்து நிறுவனங்கள் பின்வாங்கியுள்ளதன் வெளிப்பாடுதான் இது" என்று கூறியுள்ளனர்.
உண்மை இதுவா?
மேலும் சிலர் இதுபற்றி கூறுகையில், "பாட் (Bot) தொழில்நுட்பம் இன்டெர்நெட்டை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. உதாரணத்திற்கு செல்போன் நெட்வொர்க் துறையை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பெல்லாம் கஸ்டமர் கேர் எனும் ஆப்ஷன் இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால் நெட்வொர்க் நிறுவனங்கள் 'பாட்' எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
நிபுணர்கள் சொல்வது இதுதான்
இதில் நம்மிடம் கஸ்டமர் கேர் ஊழியர்கள் யாரும் பேசமாட்டார்கள். மாறாக சாட் மூலம் நமக்கு தேவையான பதில்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேட், 'பாட்' தொழில்நுட்பத்தில்தான் செய்யப்படுகிறது. நெட்வொர்க் துறை என்பது உதாரணம்தான். இதேபோல பல துறைகளில் இந்த தொழில்நுட்பம் வந்துவிட்டது. எனவேதான் ஊழியர்களை நிறுவனங்கள் பணி நீக்கம் செய்திருக்கின்றன" என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications