அவ்வளவுதான்! தாக்குதலை ஆரம்பித்த துருக்கி.. சிரியா, ஈராக்கில் குண்டுமழை.. வெடிக்கும் பிராந்திய போர்?
அங்காரா: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தே வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல்- ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மோதல் தொடர்கிறது. மறுபுறம் ஈரான் உடனும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் இப்போது துருக்கியும் சிரியாவில் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது நிலைமை மோசமாக்குகிறது.
மத்திய கிழக்கில் இப்போது எந்தளவுக்குப் பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே மோதல் தொடர்கிறது.

மற்றொரு பக்கம் இஸ்ரேல்- ஈரான் இடையேயும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழலே நிலவுகிறது. இந்த நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று துருக்கியில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதல்: துருக்கி ராணுவத்திற்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் டி.யூ.எஸ்.ஏ.எஸ் என்ற நிறுவனம் கஹ்ராமன்காசான் என்ற இடத்தில் இயங்கி வருகிறது. அங்கு திடீரென நுழைந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20+ பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் மத்திய கிழக்கின் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்த தாக்குதலை குர்திஷ் போராளிகள் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துருக்கியும் கூட இந்தத் தாக்குதலுக்கு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியே காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறது.
துருக்கி ஏவுகணை தாக்குதல்: இதையடுத்து இப்போது சிரியா மற்றும் துருக்கியில் உள்ள குர்திஷ் போராளிகளைக் குறிவைத்து துருக்கியும் தாக்குதலை நடத்தியுள்ளது. குர்ஷித் போராளிகளுக்குத் தொடர்புடைய பல இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் துருக்கியின் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
குர்ஷித் போராளிகளின் ராணுவம், உளவுத்துறை பிரிவுகளைக் குறிவைத்தும் அங்குள்ள எரிசக்தி மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் குறிவைத்தும் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வெடிமருந்து கிடங்குகளைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பாவி மக்கள்: அதேநேரம் குர்திஷ் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படைகள் வேறு விதமான தகவலையே தெரிவித்துள்ளது. வடகிழக்கு சிரியாவில் துருக்கி நடத்திய இந்த வான்வழித் தாக்குதல்களில் அப்பாவி மக்களே 12 பேர் கொல்லப்பட்டதாக சிரியா ஜனநாயகப் படைகள் தெரிவித்தன.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "கடந்த சில மணி நேரமாகவே வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், 25 பேர் காயமடைந்தனர். மக்கள் அதிகம் வாழும் பகுதிகள், பேக்கரிகள், மின் நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள், சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிரியா மட்டுமின்றி வடக்கு ஈராக் பகுதிகளிலும் துருக்கி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இவர்கள்: குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி என்பது ஆயுதமேந்திய போராளிகள். இவர்கள் இப்போது தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு ஈராக்கின் மலைப்பகுதியான குர்திஷ் பகுதியில் அதிகம் உள்ளனர். தங்களுக்குத் தனி நாடு தேவை என்று முதலில் இவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால், இப்போது சுயாட்சி மற்றும் துருக்கியில் உள்ள தங்கள் இன அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளை வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், இப்போது துருக்கியும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பிராந்திய போர் வெடிக்குமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications