மருத்துவ உலகில் அதிசயம்... பிரசவத்தின் போது 45 நிமிடங்கள் நாடித் துடிப்பு இன்றி உயிர் வாழ்ந்த பெண்!
நியூயார்க்: அமெரிக்காவில் பிரசவத்தின் போது இறந்து விட்டதாகக் கருதப் பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு உண்டானதாக மருத்துவர்கள் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ (40). பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் ரூபி. அங்கு அவருக்கு சிசேரியன் மூலமாக பிரசவம் பார்க்கப் பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்து அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்தது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.
படிப்படியாக ரூபியின் நாடித் துடிப்பு குறையத் தொடங்கியது. பின்னர் சுத்தமாக நாடித் துடிப்பு இல்லாமல் போனது. இதனால், ரூபி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் டாக்டர்கள் அறிவித்து விட்டனர்.
இதற்கிடையே, ரூபியின் வயிற்றிலிருந்த பெண் குழந்தையை பத்திரமாக டாக்டர்கள் வெளியில் எடுத்தனர்.
சுமார் 45நிமிடங்களுக்குப் பிறகு திடீரென ரூபியின் உடலில் அசைவு தெரிந்ததைக் கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து ரூபியை மீண்டும் அவர்கள் உயிர் பிழைக்க வைத்தனர்.
இந்தச் சம்பவம் மருத்துவ உலகில் நடந்த மிகப்பெரிய அதிசயம் என டாக்டர்கள் வர்ணிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications