எஸ்.எம்.எஸ். அனுப்பி விமான பயணிகளின் குடும்பத்தினருக்குத் தகவல் சொன்ன மலேசியன் ஏர்லைன்ஸ்
கோலாலம்பூர்: மார்ச் 8ம் தேதி மாயமாகி பல நாள் தேடுலுக்குப் பின்னர் கடலில் விழுந்து விட்டதாக மலேசிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பத்தாருக்கு இந்த துயரச் செய்தியை ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்துள்ளது மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
காணாமல் போன விமானம் கடலில் விழுந்திருக்கலாம். அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த எஸ்எம்எஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிக்கைகளுக்கு பிரதமர் நஜீப் ரஸ்ஸாக் பேட்டி அளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் இந்த எஸ்எம்எஸ்ஸை அனுப்பியுள்ளது மலேசிய அரசு.

விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கோலாலம்பூரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அனைவரும் இந்த எஸ்.எம்.எஸ். செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தனர்.
பலருக்கு அதிகாரிகள் நேரில் வந்து தகவல் கூறியுள்ளனர். இல்லாதவர்களுக்கு தொலைபேசி மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் தகவல்கள் போயுள்ளன.
அந்த செய்தியில், தெற்கு இந்தியப் பெருங்கடலில் எம்எச் 370 விமானம் மூழ்கியிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இதைத் துயரத்துடன் அறிவிக்கிறோம். அடுத்த சில நிமிடங்களில் மலேசியப் பிரதமர் இதுகுறித்த புதிய தகவல்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்துத் தெரிவிக்கவுள்ளார். செயற்கைக் கோள் தகவல்களின்படி விமானம் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மலேசியன் ஏர்லைன்ஸ், மலேசிய மக்கள் சார்பாக விமானத்தில் பயணித்த 226 பயணிகள், 13 சக ஊழியர்கள் ஆகியோருக்காக பிரார்த்திக்கிறோம். இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாங்கள் துணை நிற்கிறோம்.
இந்த இழப்பை ஈடுகட்ட இயலாது. துயரத்திற்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. உங்களது வலியை எங்களால் உணர முடிகிறது. உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் ஆதரவும் தொடர்ந்து செய்யப்படும்.
சர்வதேச அளவில் தற்போது நடந்து வரும் தேடுதல் முயற்சிகள் தொடரும். இன்னும் விடை இல்லாத பல கேள்விகள் உள்ளன. அவற்றைப் பெறும் வரையில் தற்போதைய நடவடிக்கைகள் அனைத்தும் தொடரும் என்று அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications