ரேடார் கண்களிருந்து தப்ப தாழ்வாய் பறந்த மாயமான மலேசியன் விமானம்
கோலாலம்பூர்: ரேடார் கண்களிலிருந்து தப்புவதற்காக குறைந்தபட்ச உயரத்திலேயே பறந்துள்ளது, மாயமாகி விட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் என்று தெரிய வந்துள்ளது.
இந்தப் புதிய தகவல் குறித்து தற்போது மலேசிய அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனராம். யாராவது எந்தத் தகவலையாவது கொடுத்தால் அதுகுறித்து விசாரிக்கும் அளவில்தான் மலேசிய அதிகாரிகளின் மந்தகரமான விசாரணை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது இந்த விமானம் 5000 அடி உயரத்தில்தான் பறந்துள்ளதாம். அதற்கு மேல் போனால்தான் ரேடார் பார்வையில் விமானம் சிக்கும். ஆனால் குறைந்த உயரத்தில் பறந்ததால் விமானம் ரேடார்கள் பார்வையில் படாமலேயோ போய் விட்டதாம்.
கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் வரை இப்படியே தாழ்வான உயரத்தில் விமானம் பறந்ததாக சொல்கிறார்ள். இதன் மூலம் கிட்டத்தட்ட 3 நாடுகளின் ரேடார்களிலிருந்து அது தப்பியுள்ளது. இது சாத்தியமா, அப்படித்தான் விமானம் பறந்ததா என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறதாம்.
விமானத்தை ஓட்டியவர், விமான தொழில்நுட்பங்களைக் கரைத்துக் குடித்த நிபுணராக இருக்க வேண்டும். அதனால்தான் இப்படி செய்ய முடிந்துள்ளது என்றும் அதிகாரிகள் நம்புகிறார்கள்.
கெலன்டன் நகருக்கு மேல் தாழ்வான உயரத்தில்விமானம் பறந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.