மாதக் கணக்கில் தேடும் இடத்தில் மாயமான மலேசிய விமானம் விழுந்திருக்காது: ஆஸ்திரேலியா
பெர்த்: இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் இடத்தில் மாயமான மலேசிய விமானம் இல்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா தலைமையில் பன்னாட்டு குழு இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை மாதக் கணக்கில் தேடி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்திய பெருங்கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் வந்த இடத்தில் மாயமான விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
கடலில் கிடைத்த சிக்னல் விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து வந்தது இல்லை என்று அமெரிக்க கடற்படை அதிகாரி மைக்கேல் டீன் தெரிவித்தார். இதையடுத்து தற்போது விமானத்தை தேடும் இடத்தில் விமானம் விழுந்திருக்க வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
முன்னதாக தெற்கு இந்திய பெருங்கடலில் சிக்னல் வந்தது கப்பல்கள் அல்லது சிக்னலை கண்டுபிடிக்க உதவும் கருவியில் இருந்து வந்திருக்கும் என்று கூறப்படுகிறது.