அமெரிக்காவில் இனவெறிக் கலவரம்- பெர்குசன் நகரில் ஊரடங்கு.. அவசர நிலை பிரகடனம்
பெர்குசன், மிசெளரி: அமெரிக்காவில் மூண்டுள்ள இனவெறிக் கலவரம் காரணமாக மிசெளரி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கலவரம் அதிகரித்துள்ள பெர்குசன் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெர்குசன் நகரில் கருப்பர் இனத்தவர் பல்வேறு கடைகள், வியாபார நிறுவனங்களை அடித்து சூறையாடித் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாகாண ஆளுநர் ஜே நிக்ஸன் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள செயின்ட் மார்க் சர்ச்சில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஆளுநர் நிக்ஸன் கலந்து கொண்டார்.
வன்முறைக்கு அனுமதி இல்லை
பின்னர் அவர் கூறுகையில், தற்போது போராட்டங்கள் அமைதியான முறையில் உள்ளன. போராட்டக்காரர்கள் பெரிய அளவில் தாக்குதலில் ஈடுபடவில்லை. இருப்பினும் சிறிய அளவிலான வன்முறையாக இருந்தாலும் கூட அதை அனுமதிக்க முடியாது.
அமைதி காக்க வேண்டும்
ஒருவர் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கருதினால் முதலில் அமைதி காக்க வேண்டும். சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்றார்.
இடையூறு
நிக்ஸன் பேசியபோதே போராட்டக்காரர்கள் அவரது பேச்சை பலமுறை குறுக்கிட்டு இடையூறு செய்தனர். இருப்பினும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பர் இன வாலிபர்
இத்தனை அமளிகளுக்கும் காரணம் ஆகஸ்ட் 9ம் தேதி 18 வயதான கருப்பர் இன இளைஞர் மைக்கேல் பிரவுன் என்பவரை ஒரு போலீஸ் அதிகாரி சுட்டுக் கொன்றதுதான். சுட்டுக் கொன்றவர் வெள்ளையர் அதிகாரி ஆவார். இதனால் அங்கு கருப்பர் இனத்தவர் கொந்தளித்து போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாகவும், கலவரமாகவும் மாறியுள்ளது.
வெள்ளை அதிகாரியால் சுடப்பட்டார்
இதற்கிடையே, கருப்பர் இன இளைஞரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரியின் பெயர் விவரம் தெரிய வந்துள்ளது. அவரது பெயர் டேரன் வில்சன். இவர் கடந்த 6 வருடங்களாக காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
வீடியோ வெளியீடு
சுட்டுக் கொல்லப்பட்டபோது கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளும் கூட தற்போது வெளியாகியுள்ளன. ஆனால் இந்த வீடியோவை பகிரங்கமாக வெளியிட எப்பிஐ மறுத்து விட்டது. அப்படி வெளியிட்டால், அது தற்போதைய வன்முறையை பெரும் கலவரமாக மாற்றி விடும் என்று அது அச்சம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வீடியோவின் ஒரு பகுதியை காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருடியதால் சுடப்பட்டார்
அதில் மைக்கேல் பிரவுனும், அவரது நண்பர் ஒருவரும் ஒரு கடையில் திருடுவது போல காட்சிகள் உள்ளன. அதன் பிறகுதான் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
லோக்கல் போலீஸ் அதிகாரியிடம் பாதுகாப்பு
இதற்கிடையே பெர்குசன் நகர பாதுகாப்புப் பணியை கேப்டன் ஜான்சன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் இவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
மிசெளரியிலும் போராட்டம்
தற்போது பெர்குசன் மட்டுமல்லாமல் மிசெளரி நகரிலும் கூட போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல இடங்களில் கருப்பர் இனத்தவர் வன்முறையில் ஈடுபட்டனர். ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன. பல இடங்களில் கலவரத் தடுப்புப் போலீஸாருடன் போராட்டக்காரர்கள் மோதிய சம்பவங்களும் நடந்துள்ளன. இருப்பினும் கலவரத்தைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்று போலீஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.