பயங்கரவாதத்தை இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது.. இனியும் நடவடிக்கை தொடரும்.. அமெரிக்காவில் மோடி பேச்சு
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பேசினார். அப்போது பயங்கரவாதத்தை இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது என்றும் இனியும் நடவடிக்கை தொடரும் என்றும் கூறியுள்ளார்.
வாஷிங்டன்: அரசுமுறை பயணமாக அமெரிக்க உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள டெல்லியில் இருந்து விமானம் மூலம் கடந்த 24ம் தேதி புறப்பட்டார்.
பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து அமெரிக்காவிற்கு பிரதமர் சென்றுள்ளார். அங்கு வெர்ஜீனியா நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

ஊழல் அற்ற..
பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் ஊழல் செய்த கட்சிகளை எல்லாம் மக்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். பாஜக அரசில் ஊழலின் சுவடு கூட கிடையாது. தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்திவதன் மூலம் வெளிப்படை தன்மை கூடும்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
இந்தியா எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய போது, உலகம் நம் பலத்தை உணர்ந்தது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட நாடு தவிர வேறு எந்த நாடும் சந்தேகத்தை எழுப்பவில்லை.

தொடரும் நடவடிக்கை
உலகிற்கே அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தை இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது. அதில் வெற்றியும் கண்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை தொடரும். அதனை யாரும் தடுக்க முடியாது.

டுவிட் செய்தால் போதும்..
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்தியா உதவ தயாராக இருக்கிறது. எந்த நேரத்திலும் சுஷ்மா சுவராஜிக்கு ஒரு டுவிட் செய்தால் போதும். அந்தப் பிரச்சனை விரைந்து முடிக்கப்படும் என்று மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications