சிலிக்கான்வேலியில் மோடி.. ஆப்பிள் உள்ளிட்ட 350 ஐடி நிறுவன ஜாம்பவான்களுடன் இரவு விருந்து!
வாஷிங்டன்: அமெரிக்காவின் சிலிக்கான்வேலி இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வருகைக்காக இன்று வழி மீது விழி வைத்து காத்துக்கிடக்கிறது. ஆம்.. 30 வருடங்களுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பதோடு, முன்னணி டெக் நிறுவனங்களை சேர்ந்த 350 நிர்வாகிகளோடு இன்று மோடி இரவு விருந்தில் பங்கேற்கிறார் என்பதும்தான் இதற்கு காரணம்.
மேற்குகடற்கரை பகுதி என்று அழைக்கப்படும் கலிபோர்னியா மாகாணத்தின், சிலிக்கான்வேலியில், ஆப்பிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் என உலகை ஆட்டி வைக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள் குவிந்துள்ளன. இங்கு 30 வருடங்களில் முதல் முறையாக... என்ற அடைமொழியுடன் இந்திய பிரதமர் மோடி காலடி எடுத்து வைக்கிறார்.

ஏற்கனவே கடந்த வாரம், சீன பிரதமர் ஜி ஜின்ங்பிங் அங்கு சென்று தங்கள் நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்புவிடுத்த நிலையில், இன்று இரவு மோடியும், அதே யுத்தியை கையாளுகிறார். ஆனால் சீன பிரதமரைவிட மோடிக்குதான் அங்கு ஏகப்பட்ட மவுசு.
பேஸ்புக்கில் சுமார் 30 மில்லியனும், டிவிட்டரில் 15 மில்லியனும் பாலோவர்களை வைத்துள்ள மோடி, சமூக வலைத்தளங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அடுத்தபடியான செல்வாக்குமிக்க உலக தலைவராக விளங்குகிறார். எனவே அதற்கேற்ப டெக்னாலஜி துறையிலும் வரவேற்பு உள்ளது.
இன்று இரவு 350 முன்னணி ஐடி நிறுவன ஜாம்பவான்களுடன் மோடி விருந்துண்ண உள்ளார். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்புவிடுவார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக, இந்தியாவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சியாக இதை மோடி முன்னெடுக்கிறார்.
இரவு உணவு நேரத்தின்போது, சத்யா நாதல்லா, சுந்தர் பிச்சை, சாநந்தனு நாராயணன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் முன்னிலையில், மோடி உரையாற்றுவார். இதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனைத்து உலக ஊடகங்களும் சிலிக்கான்வேலியில் குவிந்துள்ளன.
இன்று ஆப்பிள் நிறுவன தலைமை அலுவலகம் செல்ல உள்ள மோடி, அதன் சி.இ.ஓ டிம் குக்கை சந்திக்க உள்ளார். நாளை பேஸ்புக் மற்றும் கூகுள் தலைமையகங்களுக்கும் மோடி செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications