கடலில் ஆரஞ்சு கலரில் 2 மீட்டர் நீளத்தில் 4 பொருட்கள் கண்டுபிடிப்பு: விமான பாகங்களா?
பெர்த்: இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தை தேடியபோது ஆஸ்திரேலிய விமானம் ஒன்று ஆரஞ்சு நிறத்தில் 4 பொருட்களை கண்டுள்ளது.
கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா தலைமையில் தேடுதல் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் விமானத்தை தேட கூடுதல் விமானங்கள் மற்றும் கப்பல்கள் இந்திய பெருங்கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விமானங்கள்
நேற்று 9 விமானங்கள் மற்றும் 8 கடற்படை கப்பல்கள் கடலில் விமானத்தை தேடின. அப்போது ஆஸ்திரேலிய விமானம் ஒன்று கடலில் ஆரஞ்சு நிறத்தில் 4 பொருட்கள் மிதந்ததை பார்த்து புகைப்படம் எடுத்தது.
பாகங்களா
நேற்று காணப்பட்ட 4 பொருட்களும் 6.5 அடிக்கும் மேல் நீளமாக இருந்தன. அவை விமானத்தில் இருந்து வந்த பொருட்களா என்பதை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.
10 பொருட்கள்
முன்னதாக நேற்று முன்தினம் கடலில் மலேசிய விமானத்தை தேடிச் சென்ற 10 விமானங்களில் 5 விமானங்கள் தண்ணீரில் 10 பொருட்கள் மிதந்ததை கண்டன என்பது குறிப்பிடத்தக்கது
தேடல் தீவிரம்
விமானத்தை தேட இன்று 10 விமானங்கள் மற்றும் 10 கப்பல்கள் இந்திய பெருங்கடலுக்கு சென்றுள்ளன. இதற்கிடையே விமானத்துடன் தொடர்புடைய பொருட்கள் எதுவும் நேற்று கிடைக்கவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
உறவினர்கள்
விமானம் கடலில் மூழ்கியதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானம் குறித்து பல்வேறு தகவல்கள் வருவதால் அதில் பயணித்த சீனர்களின் உறவினர்கள் மலேசிய அரசு மீது கோபம் அடைந்துள்ளனர்.