மாஸ்கோ விமான நிலையத்தில் டிரோன் அட்டாக்.. வானில் வட்டமடித்த கனிமொழி விமானம்.. என்ன நடந்தது?
மாஸ்கோ: ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு தொடர்பாக ரஷ்யாவிடம் விளக்கம் அளிக்க திமுக எம்பி கனிமொழி தலைமையிலான அனைத்துக்கட்சி எம்பி-க்கள் அடங்கிய குழு ரஷ்யா சென்றது. அப்போது மாஸ்கோ விமான நிலையத்தில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதால், கனிமொழி குழு சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது தெரிய வந்தது. சில மணி நேரம் தாமதத்திற்கு பின் இவர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்தியா சார்பாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையில் 4 நாட்கள் போர் பதற்றம் நிலவியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் விமான தளங்களை இந்தியா அட்டாக் செய்தது.

7 குழுக்கள்
இதன் காரணமாக பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வந்தது. பின்னர் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி கொள்வதற்கு ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 4 நாட்கள் மோதல் குறித்து 33 நாடுகளுக்கு விளக்குவதற்காக அனைத்துக்கட்சி எம்பி-க்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இதன்பின் மொத்தமாக 7 குழுக்கள் அமைக்கப்பட்டன.
ரஷ்யா சென்ற எம்பிக்கள் குழு
அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அனைத்துக் கட்சி எம்பி-க்கள் அடங்கிய குழு ரஷ்யாவுக்கு சென்று விளக்கம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து அனைத்துக்கட்சி எம்பி-க்கள் அடங்கிய குழு ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றது.

கனிமொழி தவிப்பு
இந்த குழுவினர் ஸ்லோவாக்கியா, கிரீஸ், லட்வியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த பயணத்தின் போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அம்பலப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கனிமொழி சென்ற விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது தெரிய வந்துள்ளது.
டிரோன் தாக்குதல்
ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதனால் மாஸ்கோ விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சில மணி நேரம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் தர்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கனிமொழி உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்பி-க்கள் அடங்கிய குழு சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துள்ளது.

தரையிறங்குவதில் தாமதம்
சில மணி நேரம் தாமத்திற்கு பின் கனிமொழி சென்ற விமானம் பாதுகாப்பாக மாஸ்கோ விமான நிலையத்தில் தரை இறங்கி இருக்கிறது. இதன்பின் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அனைத்துக்கட்சி எம்பி-க்கள் குழுவினை வரவேற்று பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இன்று ரஷ்ய அமைச்சர்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து கனிமொழி தலைமையிலான குழு சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications