ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவில் ஆதரவு.. ஷாக் ஆன இன்பதுரை! இது லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சமீபத்தில் அதிமுக எம்பி இன்பதுரை சில விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இதையெல்லாம் தவெகவினர் பெரிய அளவில் கண்டுகொள்ளாத நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இன்பதுரைக்கு எதிராக பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர். இவர், இந்திய கூடைப்பந்து சம்மேளத்தின் 2023ம் ஆண்டு தேர்தலில், பெரும்பான்மையான வாக்குகளை பெற்று, சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி இருக்கையில், தற்போது தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

இன்பதுரையின் விமர்சனம்
இதுதான் பிரச்சனை! அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளில் இருக்க கூடாது என்று அதிமுக எம்பி இன்பதுரை விமர்சித்திருந்தார். அமைச்சராக இருந்துக்கொண்டு, கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் இருப்பது என்பது நலன் முரண்பாடு என்று இன்பதுரை கூறியிருந்தார். லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி அமைச்சர்களோ அல்லது அரசு அதிகாரிகளோ விளையாட்டு சம்மேளனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்க கூடாது என்று விதி இருப்பதையும் இன்பதுரை சுட்டிக்காட்டி, உடனடியாக ஆதவ் தனது சம்மேளன தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமையாக பேசியிருந்தார்.
இன்பதுரை சொல்வது நேர்மையான விமர்சனம்தான். ஆனால், அதிமுக நிர்வாகிகள் சிலர் இந்த விமர்சனத்தை ஏற்காமல், இன்பதுரைக்கு எதிராக பேசி சேம் சைடு கோல் அடித்திருக்கின்றனர்.
சேம் சைடு கோல்
அதாவது, இன்பதுரையின் பேச்சுக்கு மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். அதே சங்கத்தில் நான் துணை தலைவராக இருக்கிறேன். விளையாட்டு வீரராக, நாங்கள் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்று எங்களுக்குதான் தெரியும். அந்த வகையில், ஆதவ் அர்ஜுனா போன்ற விளையாட்டு வீரரை அதிமுக விமர்சனம் செய்தது என்னை பாதித்தது.
விஜய்க்கு வாழ்த்து
விளையாட்டு வீரர்கள் கடந்து வந்த கடினமான பாதையை உணர்ந்து, ஆதவ் அர்ஜுனாவை விளையாட்டு துறைக்கு அமைச்சராக்கிய முதலமைச்சர் விஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மறுபுறம் அதிமுக ஆதவ் அர்ஜுனாவை கீழ்த்தரமாக விமர்சித்தது கண்டிக்கத்தக்கது. விளையாட்டு சங்கங்களின் பதவியை வகித்த பின்னரே ஆதவ் அர்ஜுனா அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஷாக் ஆன அதிமுக
இந்த விஷயத்தை பொறுத்தவரை, இன்பதுரையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்திருக்க வேண்டும். பொதுவெளியில் நான் இப்படி பேசுவதால், கட்சி தலைமை என் மீது கோபம் கொள்ளலாம். இது குறித்து விளக்கம் கேட்டால் பதிலளிப்பேன். ஏற்காவிட்டால் என்னுடைய மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகலாம். ஆனால் எந்த சூழலையும் நான் எதிர்க்கொள்ள தயார்" என்று கூறியிருக்கிறார்.
சோலைராஜாவின் ஸ்கெட்ச்
சோலைராஜா இப்படி பேசுவதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம், மேயர் பதவிதான். மதுரை மாநகராட்சியில் திமுக ஆட்சியில் ரூ.150 கோடி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை கிளப்பியவர்களில் முக்கியமானவர்தான் இந்த சோலைராஜா. இது திமுகவுக்கு பெரிய நெருக்கடியை கொடுத்தது.
தற்போது உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், தவெகவுக்கு தாவி மேயர் பதவியை கேட்டு வாங்க சோலைராஜா ரெடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பின்னணியில்தான் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications