தமிழ்நாட்டில் வாழும் பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் பத்திரம்: சிங்கப்பூர் அரசு தகவல்
சிங்கப்பூர்: தமிழ்நாட்டில் வாழும் பதிவு செய்யப்பட்ட சிங்கப்பூர் மக்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பாக இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் பேய் மழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளது. தலைநகரான சிங்கார சென்னையே சிதைந்துள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தொலைத்தொடர்பு சாதனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள இயலாமல் தவித்தனர்.

தற்போது மழையின் அளவு சற்று குறைந்து வருவதால் பல பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் வாழும் சிங்கப்பூர் மக்களை சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத்தூதர் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார். இதன்மூலம், தமிழ்நாட்டில் வாழும் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் பாதுகாப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதர், தமிழ்நாட்டில் வாழும் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான சிங்கப்பூர் மக்களை தொடர்பு கொண்டார். அப்போது, அவர்கள் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தனர். மீதி மக்களையும் தொடர்பு கொள்ளும் பணி நடந்து வருகிறது. வெள்ள நிலைமையை சிங்கப்பூர் துணை தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து, தேவையான தூதரக உதவிகளை அளிக்கும். சிங்கப்பூர் திரும்ப விரும்புவோர், பெங்களூரு வழியாக வருமாறு அறிவுறுத்தி உள்ளோம்' என இவ்வாறுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications