காபி ஷாப்பில் குழந்தைக்கு பால் கொடுத்த பெண்ணுக்கு விபச்சாரி பட்டம்
லண்டன்: பொது இடத்தில் குழந்தைக்கு பால் கொடுத்ததற்காக விபச்சாரி என்ற ஏச்சுக்கு ஆளாகியுள்ளார் லண்டன் பெண்மணி.
லண்டனின் கென்ட் பகுதியை சேர்ந்த 27 வயது பெண்மணியான ரியா ஹோலே, தனது தோழியுடன், தெற்கு லண்டனிலுள்ள கோஸ்டா காபி ஷாப்புக்கு சென்றுள்ளார். இருவருமே தங்களது பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்திருந்தனர். அப்போது ரியாவின் 11 மாத கைக்குழந்தை ஆர்தர்தூக்கத்தில் இருந்து விழித்து பசியால் அழுதுள்ளான். இதையடுத்து ரியாவும் தனது மகனுக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
இதை பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஒரு ஜோடி, பார்த்துக்கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் திடீரென ரியாவை திட்டத்தொடங்கிவிட்டனர். "உனக்கு அறிவில்லை, பொது இடத்தில் பால் கொடுக்கிறாயே, இதெல்லாம் தப்பு என்று தெரியாதா விபச்சாரி" என்று கூறியுள்ளனர். விபச்சாரி என்பதற்கு தமிழில் ஒரு கெட்ட வார்த்தை உள்ளதே, அந்த வார்த்தையை பயன்படுத்தி அவ்வாறு கூறியுள்ளனர் அந்த இரக்கமற்ற ஜோடி.
இதைக்கேட்டதும், ரியாவுக்கு அழுகை வந்துவிட்டது, அழுது கொண்டே அங்கிருந்து விரைந்து வெளியேறிவிட்டார். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், "குறிப்பிட்ட அந்த காபி ஷாப்பில் ஏற்கனவே பலரும் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை பார்த்துள்ளேன். எனவே யாரும் தடை சொல்லமாட்டார்கள் என்றுதான் நானும் அவ்வாறு செய்தேன்" என்றார். இதனிடையே ரியா அழுது கொண்டு வெளியேறியதை பார்த்த காபி ஷாப் ஊழியர்கள், இதற்கு காரணமான ஜோடியை கடையைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின், 2010ம் ஆண்டு சமத்துவ சட்டப்படி, பொது இடத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கும் ஒரு பெண்ணை அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு கூறுவது தவறாகும்.












Click it and Unblock the Notifications