மகனுக்கு பரிசளிக்க... ஜூவிலிருந்து "பபூன்" குரங்கை திருடிச் சென்ற பாசக்கார அம்மா!
ஸ்கோப்ஜே, மாசிடோனியா: காதுகேளாத தனது ஏழு வயது மகனின் பிறந்தநாள் பரிசாக கொடுப்பதற்காக, அவனுக்குப் பிடித்த பபூன் குரங்கை மிருகக்காட்சி சாலையில் இருந்து திருடிச் சென்ற அம்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ளது மாசிடோனியா நாடு. இந்நாட்டின் தலைநகர் ஸ்கோப்ஜேயில் உள்ள மிருகக்காட்சி சாலையில் லூகா என்ற பதினெட்டு மாதமான பபூன் குரங்கு ஒன்று உள்ளது. தனது குறும்புத்தனமான செயல்களால் பார்வையாளர்களைக் கவரும் லூகாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில், கடந்த திங்களன்று மிருகக்காட்சி சாலையின் இரும்பு வலைகளை உடைத்து லூகாவை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஊழிகர்கள் ஆய்வு செய்த போது, ஒரு பெண் லூகாவைத் தனது கைப்பையில் திணித்து மறைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அவர்கள் நடத்திய விசாரணையில், லூகாவைத் திருடிச் சென்ற பெண்ணின் அடையாளம் தெரிந்தது.
அந்தப் பெண் தனது 7 வயது மகனுடன் அடிக்கடி மிருகக்காட்சி சாலைக்கு வந்ததும், லூகாவின் குறும்பை ரசித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்து சுமார் 50 மைல் தூரத்தில் வசித்துவந்த அந்தப் பெண்ணைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் லூகாவையும் மீட்டு மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரிடம் அப்பெண் அளித்த வாக்குமூலத்தில், ‘தங்களது 7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மகன், லூகாவை அதிகம் ரசித்ததாகவும், எனவே, அவனது பிறந்தநாளுக்குப் பரிசளிக்க அதனைத் திருடிச் சென்றதாகவும்' தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications