துபாயில் நடந்த க்வாஜா முயீனுத்தீன் மவுலித் மஜ்லிஸ்
துபாய்: துபாய் அஸ்கான் டி பிளாக்கில் ஸுல்தானுல் ஹிந்த் அஜ்மீர் க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி கத்தஸல்லாஹு ஸிர்ரஹூல் அஸீஸ் புனித உரூஸ் முபாரக் மவ்லித் மஜ்லிஸ் (நினைவ நாள் போற்றுதல்) நிகழ்ச்சி 2-05-2015 சனிக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது.
இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த ஹழரத் அல்லாமா பீர் முஹம்மத் ஸாகிப் பின் இக்பால் அல் ஷாமி தாமத் பரக்காத்துஹூம் உணர்ச்சி மிகு உரையை ஆங்கிலத்தில் ஆற்றினார். இஸ்லாம் அன்பையும், அமைதியையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் மார்க்கம் என்றும், பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும், ஒன்றுமறியா அப்பாவிகளையும் படுகொலை செய்யும் தீவிரவாதத்திற்கு இடமில்லை என்றும் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் போதனைகளின் அடிப்படையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
போர்கள் பற்றிய குர்ஆன் வசனங்கள் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக இஸ்லாத்தை விமர்சிப்போரால் தவறாக கையாளப்படுகின்றதோ, அவ்வாறே முஸ்லிம் இளைஞர்களை இஸ்லாத்தின் பெயரால் தவறான வழியில் திசை திருப்ப முனையும் சில தவறான இயக்கங்களாலும் அவ்வசனங்களுக்கு பொய்யான வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகின்றன என்று சுட்டிக் காட்டினார்.
நபிகள் நாயகத்தைப் பின்பற்றிய தோழர்கள், அவர்கள் வழிவந்த இறை நேசச் செல்வர்கள் மூலம் தான் உலகில் இஸ்லாம் நிலை நிறுத்தப்பட்டது என்றும், இத்தொடர் இன்றும் நிலை பெற்று அத்தூய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும், இத்தொடரிலிருந்து தடம் புரண்டோர் இஸ்லாத்தின் தூய கொள்கையிலிருந்து வெளியேறி இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர் என்றும், அஜ்மீர் கரீபுந் நவாஸ் அவர்களின் ஆத்மீக அற நெறிப் பணிகள் மூலம் தான் இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்து நிலை பெற்றது என்றும் வரலாற்று ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார்.
சைப்ரஸ் நாட்டிலிருந்து ஷெய்க் முஹம்மத் இஷ்தியாக் நக்ஷபந்தி ஹக்கானி அவர்கள், முஃப்தி அப்பாஸ் ரிஸ்வி ஸாஹிப் அவர்கள், முஃப்தி காசிம் அஸ்ஹரி ஸாஹிப் அவர்கள், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். சிஷ்திய்யா தரீக்காவைச் சேர்ந்த இங்கிலாந்து, சைப்ரஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த அன்பர்கள், துபாய் வாழ் தமிழக அனைத்து ஊர் ஜமாஅத்தினர், மற்றும் பெண்கள் பெருந்திரளில் கலந்து அல்லாஹ்வின் நல்லருளை அடைந்தனர்.
மஜ்லிஸிற்கான ஏற்பாடுகளை கீழக்கரை அப்துல் ஒஃபூர் தலைமையில், கீழக்கரை முஹம்மது மஹ்ரூஃப், காயல்பட்டினம் ஈஸா முஹ்யித்தீன், கங்கவல்லி முஹம்மது யாக்கூப், திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர்.