ஐ.நா. மனித உரிமை மீறல் விசாரணைக்கு எதிர்ப்பு- இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து எம்.பி.க்கள் போர்க்கொடி
லண்டன்: மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணையை புறக்கணித்த இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அந்த நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் வர்த்தக சலுகை வழங்கக்கூடாது என அவர்கள் கூறி உள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சகட்டம் அடைந்தபோது லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உலகில் வேறெங்கும் நடந்திராத அளவில், மனித உரிமைகள் மீறப்பட்டன.

இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விசாரணையை இலங்கை அதிபர் ராஜபக்சே நிராகரித்து விட்டார். எந்த ஒத்துழைப்பும் வழங்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதன் காரணமாக இலங்கைக்கு வர்த்தக ரீதியில் எந்த சலுகையும் வழங்கக்கூடாது என ஐரோப்பிய யூனியனிடம் இங்கிலாந்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற வெளியுறவு கமிட்டியின் தலைவரும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.யுமான ரிச்சர்ட் ஒட்டவே மற்றும் எம்.பி.க்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துகிற சர்வதேச விசாரணை குழுவுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அந்த நாடு மறுத்து வருகிறது. இது தொடர்ந்தால் அந்த நாட்டுக்கு வழங்கி வருகிற வர்த்தக சலுகைகளை நீக்குவது குறித்து ஐரோப்பிய யூனியனுடன் நமது அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
இந்த விஷயத்தில் பொருளாதார தடை விதிப்பது, சர்வதேச விசாரணை குழுவை இலங்கையில் அனுமதிக்கச்செய்வது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளையும் பரிசீலிக்க நமது அரசு தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications