பெனாசிர் கொலை வழக்கு, தேச துரோக வழக்கில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
2007ம் ஆண்டு பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ குண்டு வைத்து கொல்லப்பட்டார். அப்போது பர்வேஸ் முஷாரப் தான் பாகிஸ்தான் அதிபராக இருந்தார். பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் அவர் மீது தேச துரோகம் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேச துரோக வழக்கு மற்றும் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு முஷாரப்புக்கு சம்மன் அனுப்பக்கூடும் என்று கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முஷாரப் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாரா அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் பெனாசிர் கொலை வழக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி பாகிஸ்தானில் விதிகளை மீறி அவசர நிலை பிரகடனப்படுத்திய முஷாரப் மீது 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications