காத்மாண்டுவில் ஒருவழியாக கைகுலுக்கி 'ஹலோ' சொல்லிக் கொண்ட மோடி -நவாஸ் ஷெரீப்
காத்மாண்டு: சார்க் மாநாட்டின் முதல் நாளில் முறுக்கிக் கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இன்று பரஸ்பரம் கை குலுக்கி நலம் விசாரித்தனர்.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நேற்றும் இன்றும் சார்க் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் முதல் நாளான நேற்று ஒரே மேடையில் அமர்ந்திருந்த போதும் மோடியும் நவாஸ் ஷெரீப்பும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. அனைத்து நாட்டு தலைவர்களையும் சந்தித்த பிரதமர் மோடி நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசவில்லை.
சார்க் அமைப்பில் சீனாவையும் சேர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கு இலங்கை, மாலத்தீவு நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் சார்க் அமைப்பில் மிகப் பெரிய நாடான இந்தியாவோ இதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை.
இதனால் அதிருப்தியில் இருக்கும் பாகிஸ்தான் சார்க் நாடுகளிடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. இதனால் சார்க் அமைப்பின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் 2வது நாளான இன்று மோடியும் நவாஸ் ஷெரீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்து கைகுலுக்கி பரஸ்பரம் நலம் மட்டும் விசாரித்துக் கொண்டதாக நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பகதூர் பாண்டே கூறியுள்ளார். இருப்பினும் இருவரும் வேறு எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் இதுவரை நடத்தவில்லை.