சூரியனை சுற்றி வரும் தண்ணீர்.. இதென்ன புதுக்கதை? ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புதிய கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: சூரியனை சுற்றி நீர் போன்ற துகள்கள் உறைபனியாக இருப்பாதாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் இது நம்முடைய சூரியன் கிடையாது. சுமார் 155 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள வேறு ஒரு சூரியனை படம் பிடித்தபோது இது தெரிய வந்திருக்கிறது.
நமது உலகத்தை தவிர வேறு எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறது? என்பதை ஆய்வு செய்தபோது இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.

சூரியன், அதை சுற்றி ஒன்பது கோள்கள் என்று நாம் படித்திருப்போம். இப்போது புளுட்டோவை கோள் என்கிற அந்தஸ்த்திலிருந்து நீக்கிவிட்டார்கள். எனவே இப்போது வெறும் 8 கோள்கள்தான் இருக்கின்றன. இதில், பூமியில் திரவ வடிவில் நீர் இருக்கிறது. திரவ நிலையில் நீர் இருப்பதால்தான் இங்கு உயிர்கள் இருக்கின்றன. சூரிய குடும்பத்தில் உள்ள வேறு எந்த கோளிலும் நீர் திரவ வடிவில் கிடையாது. இந்நிலையில் மற்றொரு சூரிய குடும்பத்தில் நீர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இது திரவ வடிவில் இல்லை. ஆனால், வெளி சூரிய குடும்பத்தில் நீர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இங்கிருந்து சுமார் 155 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள 2.3 கோடி வயது கொண்ட ஒரு சூரியன் இருக்கிறது. இந்த சூரியனை சுற்றிதான் நீர் உறைபனியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சூரியனையும், இதையும் ஒன்றுடன் ஒன்று பக்கத்தில் வைத்து பார்த்தால், அதுதான் பெருசு.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. வெளி சூரிய குடும்பத்தில் நீர் இருக்கும் என்பதை நாம் கருத்தாக முன்வைத்திருந்தோம். ஆனால், இது நிரூபிக்கப்படாமல் இருந்தது. தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உறைபனி நீருடன் சேர்த்து, படிக நீரையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்திருக்கிறது. இந்த நீர் ஸ்பேஸ் குப்பை என்று சொல்லலாம். ஆனால் பூமியை பொறுத்த வரை, நீர் என்பது பொக்கிஷம்.
இது எங்கிருந்து வந்திருக்கும் என்பது இப்போது இருக்கும் கேள்வி. அந்த சூரியனை சுற்றி வரும் கோள்களிலிருந்து நீர் ஆவியாகி இங்கு வந்திருக்கலாம். அது எந்த கோள்? அதில் உயிர்கள் இருந்திருக்கிறதா? அந்த உயிர்கள் எப்படிப்பட்டவை? இதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டால் நாம் ஏலியனை கண்டுபிடித்துவிடுவோம்" என்று கூறியுள்ளனர்.
ஒருவேளை இந்த சூரியனை சுற்றி பூமி போன்ற கிரகம் இருந்தால், அதில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால் அவ்வளவு தூரம் போவதற்கான ஒரு ராக்கெட்டை கண்டுபிடிப்பது மட்டும்தான் இப்போது பாக்கி.
அப்போஃபிஸ் போன்ற விண்கற்கள் 2029-2068ம் ஆண்டுகளில் பூமியை தாக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியாது. ஆனால் அப்படிப்பட்ட தாக்குதல்கள் இனி வரும் காலங்களில் ஒரு முறையாவது நடக்கலாம். இதில் மனித குலம் அழியவும் வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் வேறு ஒரு கிரகத்தை நாம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று ஆய்வார்கள் சொல்கிறார்கள். அதற்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வழிக்காட்டும் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications