நேபாளத்தில் முடிவுக்கு வரும் வன்முறை? சுஷிலா கார்க்கி தலைமையில் அமையும் இடைக்கால அரசு! முக்கிய தகவல்
காத்மண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. போராட்டக்காரர்களின் ஆதரவு சுஷிலா கார்க்கிக்கு இருப்பதால், அங்கு வன்முறை மெல்ல முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. முதலில் சமூக வலைத்தள தடைக்கு எதிராகத் தொடங்கிய இந்த போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடித்தது. சமூக வலைத்தள தடையை நீக்குவதாக அப்போதிருந்த ஷர்மா ஒலி அரசு அறிவித்தாலும் கூட போராட்டம் முடிவுக்கு வரவில்லை.. மிகச் சீக்கிரமே அந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது.

அங்கு நிலைமை மிக மோசமாக போனது. அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அவ்வளவு ஏன் நாடாளுமன்ற வளாகத்திலும் புகுந்த போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது. வரிசையாக பல்வேறு அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், ராணுவம் கேட்டுக்கொண்டதால் வேறு வழியில்லாமல் ஷர்மா ஒலியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் நேபாளத்தில் மிகவும் குழப்பமான சூழல் ஏற்பட்ட நிலையில், அங்கு அமையும் இடைக்கால அரசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி, இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தவுள்ளார். போராட்டத்தை முன்னெடுத்த ஜென் இசட் இளைஞர்களின் ஆதரவும் சுஷிலா கார்க்கிக்கு இருக்கும் சூழலில், வன்முறை மெல்லக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக 5,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் வாயிலாக நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் தான் சுஷியலா கார்கி இடைக்கால அரசின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இளைஞர்கள் நாட்டின் மாற்றத்திற்கு என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருப்பதால் தலைமை ஏற்கத் தயாராக இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
72 வயதான கார்க்கி, நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார். அவர் தனது நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக அறியப்பட்டவர். கார்க்கி 2016-ல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். மேலும், 2006ல் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கும் பணியிலும் அவர் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வரை நேபாள வன்முறையால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் பல அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.. சிறைச்சாலைகளைச் சூறையாடினர்.. இந்த வன்முறைகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் இப்போது களமிறங்கியுள்ளது. காத்மாண்டுவில் ராணுவம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications