செவ்வாயில் தண்ணீர் இருப்பதை 'ஜஸ்ட் லைக் தட்' கண்டுபிடித்த நேபாளி மாணவர்..!
நாசா: லுஜேந்திரா "லுஜா" ஓஜா.. அருமையான கிடார் கலைஞர்.. அபாரமான அறிவியலாளர்.. ஜாலியான மாணவர்.. இப்படி பல முகங்கள் இந்த ஓஜாவுக்கு. ஆனால் இவர்தான் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஜஸ்ட் லைக் தட் கண்டுபிடித்தவர் என்றால் நம்ப முடிகிறதா.. தற்செயலாக நடந்த கண்டுபிடிப்பு அது. ஓஜா சொன்னது இன்று உண்மையாகியுள்ளது.
நேற்று நடந்த நாசா செய்தியாளர்கள் கூட்டத்திற்கு ஓஜாவும் அழைக்கப்பட்டிருந்தார். அவரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் நாசா விஞ்ஞானிகள் குழு, செவ்வாயில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
செவ்வாயில் திரவ நிலையில் உள்ள உப்பு தண்ணீர் குறித்து தனது ஆய்வு குறித்தும் அப்போது விளக்கினார் ஓஜா.

25 வயதுதான்
வெறும் 25 வயதுதான் ஆகிறது இந்த இளம் விஞ்ஞானிக்கு. தற்போதும் கூட இவர் மாணவர்தான். ஜார்ஜியா டெக் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வருகிறார். தன்னை ஒரு பெரிய விஞ்ஞானி என்று கூறுவதையெல்லாம் ஏற்கவே முடியாது என்று சிரித்தபடி கூறுகிறார் ஓஜா.

நிலநடுக்க ஆய்வு
அறிவியலின் அனைத்துப் பிரிவிலும் ஆர்வம் கொண்டவர் ஓஜா. நிலநடுக்கம் தொடர்பாக தற்போது நிறைய படித்து வருகிறார். ஏன் அவை ஏற்படுகின்றன, அதை எப்படி முன்கூட்டியே கணிக்க முடியும் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்தி வருகிறார் ஓஜா.

தற்செயலாக கண்டுபிடிப்பு
இவர் எம்.ஆர்.ஓ எனப்படும் மார்ஸ் ரீகனயஸன்ஸ் ஆர்பிட்டாரின் தகவல்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோதுதான் தற்செயலாக செவ்வாய் கிரகத்தின் பரப்பளவில் தண்ணீர் உறை நிலையில் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். பெர்க்குளோரேட்டுகள் குறித்தும் அவர் கூறினார். புதிய முறையில் ஆய்வு செய்தால் இதை உறுதிப்படுத்தலாம் என்றும் நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்தார். அவர் கூறியபடி நடத்தப்பட்ட ஆய்வி்ல்தான் அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய முடிந்துள்ளது.

ஹிப்பிவாலா
படு எதார்த்தமானவராக இருக்கிறார் இந்த ஓஜா. அறிவியலில் தீவிரமாவதற்கு முன்பு அவர் ஹிப்பி வளர்த்தபடி, ஜாலியா கிடார் வாசித்தபடி இருந்துள்ளார். ஆனால் அது ஜாலிக்காக அல்ல. கையில் நாலு காசு வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாகத்தான்.

அறிவியலும் காசு தரலையே!
"எனக்கு நிறைய காசு தேவைப்பட்டது அப்போது. ஆனால் வீட்டில் வசதியில்லை. எனவே இசையைத் தேர்வு செய்தேன். ஆனால் இதிலும் காசு வரவில்லை. அறிவியலில் காசு கிடைக்கும் என்றார்கள். ஆனால் அறிவியலிலும் காசு கிடைக்கவில்லை என்கிறார் சிரித்தபடி.

நேபாளத்திலிருந்து
இவரது பூர்விகம் நேபாளம் ஆகும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓஜா, தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். டீன் ஏஜ் வயதில் அங்கு வந்த அவர் அரிஸோனா மாகாணம் டஸ்கான் நகரில் குடியேறினர்.

மெக்வென்னுடன் இணைந்து
அங்குதான் எம்.ஆர்.ஓவின் ஹை ரெசலூஸன் கேமராவின் பொறுப்பில் நாசா விஞ்ஞானி ஆல்பிரட் மெக்வென் ஈடுபட்டிருந்தார். அவரிடம் உதவியாளராக சேர்ந்தார் ஓஜா. அந்த சமயத்தில்தான் அவர் ஆர்.எஸ்.எல் எனப்படும் செவ்வாயில் நீர் வழிந்தோடிய தடத்தைக் கண்டுபிடித்தார். அது நிச்சயம் தண்ணீராகத்தான் இருக்கும், உப்புப் படிவம் போல இது தென்படுகிறது என்று சொன்னார். இதையடுத்தே அதுகுறித்த ஆய்வுகளை நாசா முடுக்கி விட்டது.

2011ல் அறிவிப்பு
2011ம் ஆண்டு மெக்வென்னும், ஓஜாவும் இந்த ஆர்எஸ்எல் குறித்து அறிவித்தனர். செவ்வாய் கிரகத்தில் திரவம் இருப்பதை அவர்கள் முறைப்படி அறிவித்தனர். அதன் பின்னர் ஜார்ஜியா கிளம்பிச் சென்ற ஓஜா அங்கு தனது பிஎச்டி ஆய்வில் மூழ்கிப் போனார்.

ஓஜா போட்ட பிள்ளையார் சுழி
நமக்குப் புரியாத புதிராக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் உப்புத் தன்மை கொண்ட தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது என்றால் அதற்கு ஓஜா போட்ட பிள்ளையார்சுழிதான் காரணம்.

கவலை தரும் நேபாள நிலநடுக்கம்
ஆனால் செவ்வாய் குறித்தெல்லாம் ஓஜாவுக்குப் பெரிய கவலை கிடையாது. மாறாக தனது நாடான நேபாளத்தின் மீதுதான் அவர் அக்கறையாக இருக்கிறார். காரணம் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதை அவரைப் பெரிதும் பாதித்துள்ளது. எனவேதான் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications