"ரொம்ப நன்றிங்க!" அப்படியே திரண்டு வந்த பாகிஸ்தான் மக்கள்! கலங்கி போன இம்ரான் கான்.. என்னாச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Recommended Video
அண்டை நாடான பாகிஸ்தானில் சுதந்திரத்திற்குப் பின்னர் இதுவரை எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தது இல்லை. இந்த மோசமான சாதனையை இம்ரான் கான் முடிவுக்குக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், அவராலும் இதில் இருந்து தப்ப முடியவில்லை. 2019இல் புதிய பாகிஸ்தான் படைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான், இப்போது பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சீராகச் செல்லவில்லை. பல விஷயங்களில் அங்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் கிளம்பி வந்தது. இதனால் இம்ரான் கான் அரசுக்கு எதிரான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிராக அங்குள்ள அரசியல் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் இம்ரான் கான் அரசுக்கு எதிராகத் திரும்பியதால் சிக்கல் எழுந்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்
பெரும் அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், தான் கடந்த சனிக்கிழமை இரவு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இம்ரான் கான் அரசு பதவி விலகியது. பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நீக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பாக். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 342 பேரில் 174 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததால் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

மக்கள் போராட்டம்
இருப்பினும், தனது ஆட்சியைக் கழிப்பதில் அந்நிய நாட்டுச் சதி, அதாவது அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் தொடர்ந்து சாடி வருகிறார். மேலும், பாகிஸ்தான் நாட்டில் இப்போது மீண்டும் ஒரு சுதந்திர போர் தொடங்கி உள்ளதாகவும் பாக். ஜனநாயகத்தைக் காக்கப் பொதுமக்கள் வீதிகளுக்கு வந்த போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் திரண்டு வந்து வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
|
இம்ரான் கான்
இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், "அமெரிக்க ஆதரவுடன் இங்கு ஆட்சி மாற்றத்தை நடத்தச் சிலர் முயல்கின்றனர். இங்குள்ள சிலரின் ஆதரவுடன், வஞ்சகர்களின் கூட்டத்தை ஆட்சிக்குக் கொண்டுவரச் சிலர் முயல்கின்றனர். இதை எதிர்த்து வீதிகளில் வந்து போராடும் அனைத்து பாகிஸ்தான் மக்களுக்கும் நன்றி. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் போராட்டங்கள் பாகிஸ்தான் மக்கள் இதை நிராகரித்ததையே காட்டுகிறது.

வரலாற்றில் முதல்முறை
பாகிஸ்தான் வரலாற்றிலேயே இதுபோல பெரும் திரளாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியது இல்லை. வஞ்சகர்களின் முன்னெடுக்கும் இந்த அந்நிய நாட்டின் அரசை மக்கள் முழுவதுமாக நிராகரித்து உள்ளதையே இது காட்டுகிறது" என்று ட்வீட் செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் புதிய பிரதமர் இன்று தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், மக்கள் போராட்டம் தொடர்வது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

சவுகிதார்
முன்னதாக நேற்றிரவு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தலைமையில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஷேக் ரஷீத் அகமது பேசிக் கொண்டு இருக்கும் போது, திடீரென கூட்டத்தில் ஒரு பகுதியினர் "சவுகிதார் சோர் ஹை' (காவலரே ஒரு திருடன்) என்று முழக்கமிடத் தொடங்கினர். நன்றாகச் சென்று கொண்டிருந்த இம்ரான் கானின் ஆட்சியை பாக். ராணுவம் திருடியதைச் சாடும் வகையில் மக்கள் இந்த கோஷத்தை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications