ஓராண்டுக்கு முன் மறைந்த தாய்லாந்து மன்னரின் உடல் தகனம்.. பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் உடல் ஓராண்டுக்குப் பின் நேற்று தகனம் செய்யப்பட்டது.
பாங்காக்: மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் உடல் ஓராண்டுக்குப் பின் புத்த மத வழக்கப்படி நேற்று தகனம் செய்யப்பட்டது.
தாய்லாந்து மன்னராக இருந்தவர், பூமிபால் அதுல்யதேஜ். 1946-ம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மன்னராக முடிசூட்டப்பட்ட இவர் 9ஆம் ராமர் என அழைக்கப்பட்டார்.
88 வயதான மன்னர் பூமிபால் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி காலமானார். தாய்லாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக இருந்தவர் இவர்தான் என்ற பெருமையை பெற்றவர் பூமிபால்.
ஓராண்டு துக்கம் கடைபிடிப்பு
நவீன தாய்லாந்தை உருவாக்கிய பெருமையும் மன்னர் பூமிபாலுக்கு உண்டு. அவரது மறைவுக்கு ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
உலகத் தலைவர்கள் அஞ்சலி
அவரது உடலுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் மன்னர் இறந்து ஓராண்டு முடிந்த நிலையில் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
ரூ.600 கோடியில் தகன மேடை
இதற்காக அரண்மனையில் கடந்த 5 நாட்களாக புத்த மத வழக்கப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்று வந்தன. மேலும் மன்னரின் உடலை தகனம் செய்வதற்காக 600 கோடி ரூபாய் செலவில் தகன மேடை அமைக்கப்பட்டது.
தகன மேடையில் தங்கச்சிலைகள்
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தகன மேடையை அமைக்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டிருந்தது. தங்க முலாம் பூசப்பட்ட அரண்மனை வடிவில் தகன மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதனை சுற்றிலும் நுண்ணிய கலை நுட்ப வேலைபாடுகளுடன் கூடிய தங்கச் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள்
ராணுவ வீரர்களும் மன்னரின் உடலை கொண்டு வரும்போது அளிக்க வேண்டிய மரியாதைக்காக பலமுறை ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். தகன மேடை முன்பு இருந்த இடம் மக்களின் கூட்டத்தால் நிரம்பியதை அடுத்து, அவரை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என மன்னரின் உடல் கொண்டுவரப்படும் வழிநெடுகிலும் மக்கள் கடந்த ஒரு வாரமாக மழை மற்றும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்துக்கிடந்தனர்.
கண்ணீருடன் பிரியாவிடை
இந்நிலையில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் மன்னர் பூமிபாலின் உடல் நேற்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கறுப்பு உடையணிந்து மன்னருக்கு இறுதியாக கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.
தாய்லாந்தில் பொதுவிடுமுறை
மன்னரின் உடல் தகனத்தையொட்டி தாய்லாந்து நாட்டில் நேற்று பொது விடுமுறை விடப்பட்டிருந்தது. அங்கு அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.
செல்பி எடுக்கக்கூடாது
இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் மன்னரின் குடும்பத்தினருடன், 40 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இறுதிச்சடங்கை யாரும் செல்பி எடுக்க கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டது.
தீ மூட்டினார் வஜிரலோங்கோன்
புத்த மத வழக்கப்படி உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மன்னர் உடலுக்கு அவரது மகனும், புதிய மன்னருமான வஜிரலோங்கோன் தீ மூட்டினார். மன்னர் உடல் தகனம் முடிந்து விட்டதால், இனி முறைப்படி புதிய மன்னராக வஜிரலோங்கோன் முடி சூட்டப்படுவார். அவர் பத்தாம் ராமர் என்று அழைக்கப்படுவார்.