காபி கடையில் பெண்ணின் ஜடையை பிடித்து இழுத்து மன்னிப்பு கேட்ட நியூசிலாந்து பிரதமர்
வெல்லிங்டன்: காபி கடையில் வேலை செய்யும் பெண்ணின் ஜடையை பிடித்து அடிக்கடி இழுத்ததற்காக அவரிடம் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ மன்னிப்பு கேட்டுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஜான் கீயின் வீட்டுக்கு அருகே உள்ள காபி கடையில் வேலை செய்யும் பெண் ஒருவர் புதன்கிழமை பிளாக் ஒன்றில் கூறியிருப்பதாவது,
பிரதமர் ஜான் கீ கடந்த 2014ம் ஆண்டில் இருந்து கடந்த மாதம் வரை எங்கள் கடைக்கு வந்தபோது எல்லாம் என் போனிடெய்லை(தலைமுடியை) பிடித்து பிடித்து இழுத்தார். அவர் ஏதோ விளையாட்டாக ஜாலிக்காக செய்கிறார் என நினைத்து முதலில் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
பிடிக்கவில்லை
கீ என் போனிடெய்லை பிடித்து இழுப்பது எனக்கு பிடிக்கவில்லை என்றும், அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறுங்கள் என நான் ஜான் கீயின் பாதுகாவலர்களிடம் தெரிவித்தும் பலனில்லை.
சும்மா இருங்க
பாதுகாவர்களிடம் புகார் தெரிவித்தும் பலனில்லாமல் போனது. கீ மீண்டும் என் முடியைப் பிடித்து இழுத்தார். அப்போது அவரது கையை தட்டிவிட்டேன். முடியை பிடித்து இழுக்காதீர்கள் என்று அவரிடமே தெரிவித்தேன்.
அடி
இனியும் என் முடியை பிடித்து இழுத்தால் உங்களை அடித்துவிடுவேன் என்று நான் கீயிடம் தெரிவித்தேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் கவலையில் அழுதுவிட்டேன்.
மன்னிப்பு
ஜான் கீ விரைவிலேயே எங்கள் கடைக்கு வந்தார். அவரது தோட்டத்தில் தயாரிக்கப்பட்ட 2 ஒயின் பாட்டில்களை கொண்டு வந்து என்னிடம் கொடுத்து இது உங்களுக்கு. என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேண்டும் என்று செய்யவில்லை என்றார் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம்
இந்த சம்பவம் பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அந்த பெண்ணை அசௌகரியப்படுத்த கீ அவ்வாறு செய்யவில்லை. அவர் விளையாட்டாக செய்த காரியத்திற்காக அந்த பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.