மருத்துவ உதவி தாமதமானதால் இறந்து போன இரட்டைக்குழந்தைகள் – தாயும் கோமாவில்!
பர்மிங்காம்: இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஆம்புலன்ஸை அழைத்த கர்ப்பிணி பெண்ணிற்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் அவரின் இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பர்மிங்காமில் உள்ள பிளேக் ஹவுஸ் பகுதியில் வசித்து வந்த ஜோஸ்லின் எனும் 27 வயது பெண் 34 வார கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு எதிர்பாராத விதமாக கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.
12 நிமிடங்கள் கழித்து வருகை:
ஜோஸ்லின் மருத்துவ உதவிக்காக அழைத்து 12 நிமிடங்கள் கழித்து அவரது வீட்டிற்கு விரைந்த மருத்துவ உதவியாளர்களால் அவர்களது வீட்டினுள் நுழையமுடியவில்லை.
காவல்துறையினரின் உதவி:
உடனடியாக காவல் துறையினரின் உதவியை நாடிய மருத்துவ பணியாளர்கள் 30 நிமிடங்கள் கழித்து ஜோஸ்லினின் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்:
அங்கு இதய துடிப்பு நின்றிருந்த நிலையில் தரையில் விழுந்துகிடந்த ஜோஸ்லினை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மருத்துவ உதவியாளர்கள், அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகளையும் வெளியேற்றினர்.
நிறுத்தப்பட்ட உயிர்காக்கும் கருவிகள்:
ஆனால், குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, உள் உறுப்புகள் பாதிப்படைந்ததால் குழந்தைகள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லாமல் போனது. இதனால் குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகள் நிறுத்தப்பட்டது.
சோகத்தில் குடும்பத்தினர்:
பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகளை இழந்த குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.
கோமாவில் தாய்:
கடும் சோகத்தில் மூழ்கிய இவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பது போல குழந்தைகளின் தாய் ஜோஸ்லினும் கோமாவில் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சரியான நேரத்தில் உதவி இல்லை:
இந்த சம்பவம் குறித்து தெரிவித்த ஜோஸ்லினின் தந்தை, "என் மகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால், நான் எனது இரண்டு பேத்திகளை இழந்திருக்க மாட்டேன்.
மருத்துவ உதவி அவசியம்:
எனது மகள் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவசர காலங்களில் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என கூறினார்.












Click it and Unblock the Notifications