சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ்.. ஆபத்தானதா? பரவுமா? அறிகுறிகள் என்ன? அறிய வேண்டிய தகவல்கள்
பீஜிங்: கொரோனா பெருந்தொற்றை ஏற்படுத்திய வைரசை போன்றதொரு புதிய HKU5-CoV-2 என்ற வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டதா? பாதிப்பு ஏற்பட்டால் அறிகுறிகள் எப்படி இருக்கும்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் கூட மக்கள் மத்தியில் இருந்து முழுமையாக மறையவில்லை. ஆனால் சீனாவில் அடுத்தடுத்து புதிய வைரஸ்கள் வெளிப்பட்டு மக்களை பீதி அடைய வைத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹெச்.எம்.பி.வி வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது HKU5-CoV-2 என்ற வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் மீண்டும் புதிய வைரஸ்
வூஹான் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர். வவ்வால்களிடம் இருந்து பரவக் கூடிய இந்த வைரஸ், விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படும் இந்த வைரஸ், ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டது. இந்த வைரசும் கொரோனா பெருந்தொற்றை போலவே, மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் ACE 2, அதாவது இதற்கு முன்பாக கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்-2 வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன?
இதுவரை HKU5-CoV-2 வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்பட்டதாக தெரியவில்லை. எனவே இதன் அறிகுறிகளும் உறுதியாக தெரியவில்லை. எனினும், மெர்ஸ் மற்று கொரோனா பெருந்தொற்று போலவே இந்த வைரஸும் சுவாச மண்டலத்தை தாக்க கூடியது என்பதால் அதே மாதிரியான சுவாச உறுப்புகளை பாதிக்கும். அதாவது, இதன் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை புண், பலவீனம், உடல் வலி ஆகியவை இருக்க கூடும்.
இந்த வைரஸ் எப்படி பரவும்
இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள வவ்வால்களிடம் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவக் கூடியது. சளி, சிறுநீர், மலம் உள்ளிட்ட உடல் திரவங்களில் இருந்து இந்த வைரஸ் பரவும். இதுபோக இந்த வைரஸ், மனிதனுக்கு பரவும் முன்பாக பிற பாலூட்டி வகை உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புள்ளது. அதாவது கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவியதோ அதே மாதிரி பரவக் கூடியது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை உலுக்கிவிட்டு சென்றது. இந்த வைரஸ் சீனாவில் இருந்தே பரவியதால், சீனாவில் இருந்து வெளிப்படும் வைரஸ்கள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில் மீண்டும் சீனாவில் புதிய வைரஸ் வெளிப்பட்டு இருப்பதாக வெளியாகும் தகவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications