நைஜீரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 'நாத்தீக' இளைஞர் வெளியேற்றம்
அபுஜா: கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறியவந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
நைஜீரியாவின், முபாரக் பாலா என்ற இளைஞர் ஒரு பொறியியல் பட்டதாரி. அவர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிய காரணத்தால் கனோ மருத்துவமனையின் மனநல பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கிட்டதட்ட 18 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அம்மருத்துவமனையின் மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கிருந்து பல்வேறு நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அந்நோயாளிகளுடன் சேர்ந்து பாலாவும் வெளியில் அனுப்பப்பட்டார்.
அவருடைய பாதுகாப்பு கருதி பாதுகாப்பான் இடத்திற்கு சென்றவுடன் இத்தகவல்களை வெளியிடுவதாக சர்வதேச மனித நேய மையம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடவுள் இல்லை என்று கூறிய பாலா விருப்பமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இவர் மற்றவர்களிடம் உதவி கேட்டு தொடர்பு கொண்டதால் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இருப்பினும் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் வழியாக அவர் வெளியுலக உதவியை நாடினார். தற்போது அவர் வெளியேற்றப்பட்டுள்ளபோதிலும் சமய குற்றச்சாட்டுகள் அந்நாட்டில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மனிதநேய மையம் தெரிவித்துள்ளது.
தனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக பாலா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.