10 வயது சிறுமியின் உடலில் வெடிகுண்டு பெல்ட்: நைஜீரியாவில் பரபரப்பு
அபுஜா: நைஜீரியாவில் 10 வயது சிறுமியின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி பயணம் செய்த 2 போக்கோ ஹரம் தீவிரவாதிகள் என்று கருத்தப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நைஜீரியாவில் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மேலும் அவ்வப்போது கிராமங்களுக்குள் புகுந்து மக்களை தாக்குவது, கடத்துவது என்று அட்டகாசம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வடக்கு நைஜீரியாவின் மிகப் பெரிய நகரமான கனோவில் இருந்த கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நைஜீரியாவின் கட்சினா மாநிலத்தில் சென்ற ஹோண்டா சிஆர்வி காரை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ஹல்திசா(10) என்ற சிறுமியின் உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. சிறுமியுடன் இருந்த இலியா மற்றும் ஜைனப் ஆகிய பெண்கள் காருடன் தப்பிக்க முயன்றனர்.
அவர்களை பொது மக்கள் பிடித்து ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இலியா மற்றும் ஜைனப் போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.