கிரானா மலையில் என்ன நடந்தது? அணு மையத்தை அடித்து நொறுக்கியதா இந்தியா? மௌனம் கலைத்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: தங்கள் நாட்டின் அணு ஆயுத கிடங்குகள், மையங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை, எதுவும் தாக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் நாட்டு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நிலநடுக்கங்கள் பல்வேறு விதமான சந்தேகங்களை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை அடுத்து அங்கே நடக்கும் நிலநடுக்கங்கள் வெறும் நிலநடுக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தான் நாட்டில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக ஒரே நாளில் தொடர்ச்சியாக இரண்டு நிலநடுக்கங்களை சந்தித்தது - காலையில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.
புவியியலாளர்கள் மற்றும் வானிலை நிபுணர்கள் நில அதிர்வு இமயமலைப் பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிட்டனர். இங்கே நிலநடுக்கம் ஏற்படுவது பொதுவான நிகழ்வுதான். ஆனால் இந்த நேரத்தில் அங்கே நிலநடுக்கம் ஏற்படுவthaal அது அணு ஆயுத சோதனையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிரானா மலைகளில் உள்ள பாகிஸ்தான் அணு ஆயுத சேமிப்பு கிடங்கின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இங்கே இருக்கும் சுரங்கப்பாதை தாக்கப்பட்டது. அதே நாளில்தான் அங்கே 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கே ஒன்று அணு ஆயுத வசதி ஏதாவது தகர்க்கப்பட்டு அதனால் அணு கசிவு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது அணு ஆயுத வசதி தகர்க்கப்பட்ட நிலையில் அங்கே இதனால் அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 13 நாட்களில் 4 நிலநடுக்கங்கள் அங்கே ஏற்பட்டு உள்ளதுதான் சந்தேகத்திற்கு காரணம். ஏப்ரல் 30, மே 5, 10 & 12 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது. இது இயற்கையான நடுக்கங்களா? நிலத்தடி உள்ளே நடத்தப்படும் அணுசக்தி சோதனைகளா? வேறு ஏதாவது இராணுவ நடவடிக்கைகளின் அறிகுறிகளா? இந்தியா நடத்திய தாக்குதலின் தாக்கமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் விளக்கம்
இந்த நிலையில்தான் தங்கள் நாட்டின் அணு ஆயுத கிடங்குகள், மையங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை, எதுவும் தாக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் நாட்டு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தங்களின் அணு ஆயுத மையங்கள், சேமிப்பு கிடங்குகள் பாதுகாப்பாக உள்ளன.
அவற்றை யாரும் தாக்கவில்லை. அதில் எந்த விதமான கசிவுகளை ஏற்படவில்லை. கசிவுகள் தொடர்பாக வெளியாகும் செய்திகளில் உண்மை கிடையாது என்று பாகிஸ்தான் நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
மோடி எச்சரிக்கை
சமீபத்தில்தான் பிரதமர் மோடி பேசுகையில், அணு ஆயுத சோதனைகளை வைத்து இந்தியாவை மிரட்ட முடியாது என்று கூறினார். அதில், பாகிஸ்தானில் இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியபோது, பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் தைரியமும் நடுங்கியது. பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத தளங்கள் உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 9/11 மற்றும் இந்தியாவில் நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட உலகில் நடந்த அனைத்து பெரிய பயங்கரவாத தாக்குதல்களும் இந்த பயங்கரவாத தளங்களுடன் தொடர்புடையவை.
பாகிஸ்தான் அணு ஆயுதத்தை காட்டி எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் அதற்கு அஞ்ச மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications