அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க 7 நிமிடங்களுக்கு முன்னதாக வந்த வடகொரிய அதிபர் கிம்! ஏன் தெரியுமா?
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திக்க 7 நிமிடங்களுக்கு முன்னதாக வடகொரிய அதிபர் காத்திருந்ததன் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திக்க 7 நிமிடங்களுக்கு முன்னதாக வடகொரிய அதிபர் காத்திருந்ததன் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் இன்று சந்தித்து பேசினர்.
2011ஆம் ஆண்டு வடகொரிய தலைவராக பதவியேற்ற பின், அண்மையில் கிம் ஜாங் உன் சீனாவிற்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் முறையாக கிம் ஜாங் உன் வெளிநாடு சென்றிருக்கிறார்.
பேச்சு நடத்தியது இல்லை
1950 - 53 காலகட்டத்தில் நிகழ்ந்த போருக்குப் பின், எதிரிகளாக இருந்து வரும் வடகொரியா - அமெரிக்கா அதிபர்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பேச்சு நடத்தியது இல்லை.
உலக நாடுகள் வரவேற்பு
இந்நிலையில் இருநாட்டு தலைவர்களும் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இன்று முதல் முறையாக சந்தித்துப் பேசினர். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
வடகொரியா ஒப்புதல்
இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்ததாக இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அணு ஆயுத தளங்களை அழிக்க வடகொரியா ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று காலை சந்திப்பு
இந்நிலையில் ட்ரம்ப் - கிம் சந்திப்பின் போது நிகழ்ந்த பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ட்ரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரின் சென்டோசா தீவில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
வடகொரிய பாரம்பரியம்
இதில் அறிவித்த சந்திப்பு நேரத்திற்கு 7 நிமிடங்கள் முன்னதாக கிம் சந்திப்பு நிகழ்ந்த கேபல் விடுதிக்கு சென்று காத்திருந்தார். வடகொரிய பாரம்பரியப்படி வயதில் சிறியவர்கள்தான் எந்த நிகழ்வாக இருந்தாலும் முன்கூட்டியே வரவேண்டுமாம்.
31 வயதான கிம்
அதனை மனதில் வைத்தே 34 வயதான கிம், 71 வயதான டொனால்டு ட்ரம்பை சந்திக்க 7 நிமிடங்கள் முன்னதாக வந்து காத்திருந்தாராம்.