சத்தமே இல்லாம வட கொரியா செய்த சம்பவம்.. “ஸ்பை சாட்டிலைட்”.. பதறிய ஜப்பான்.. ஆனா கடைசியில்.. போச்சே!
சியோல்: உலக நாடுகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று உளவு செயற்கைக்கோளை வட கொரியா ஏவிய நிலையில், சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
1980-களுக்குப் பிறகு முதல் முறையாக, தென் கொரியாவுக்கு அணு ஆயுதம் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை (SSBN) அமெரிக்கா அனுப்பியது. தென் கொரியா, தங்களது ராணுவ பலத்தை உயர்த்தி வருவது வட கொரியாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் ஏவியது. ஆனால் ராக்கெட் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது.
தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைக்க முயன்று வருகிறது வடகொரியா. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக இந்த உளவு செயற்கைக்கோளை நிலைநிறுத்த திட்டமிட்டு வருகிறது வடகொரியா.
இந்நிலையில் உளவு செயற்கைக்கோளை மீண்டும் விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. இந்நிலையில் வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக பதறிப்போய் ஜப்பான் பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்தது.
வட கொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் (NADA) தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது. அதேசமயம் ராக்கெட் அமைப்பின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையின் அடிப்படையில் இது "பெரிய பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளதாக வட கொரிய அரசின் ஊடகம் KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
தோல்விக்கான காரணத்தை முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்த பிறகு மூன்றாவது உளவு செயற்கைக்கோள் ஏவுதலை அக்டோபரில் நடத்துவோம் என்ற நிலைப்பாட்டை வட கொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் வெளிப்படுத்தியது என்று KCNA தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வட கொரியாவின் சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதிலிருந்து கண்காணித்ததாகவும், அது தோல்வியடைந்துள்ளதாகவும் தென் கொரியா இராணுவமும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications