அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ், மலாலாவுக்கு ஒபாமா வாழ்த்து
வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒபாமா கூறியுள்ளதாவது: மலாலாவையும், கைலாஷ் சத்யார்த்தியையும் நானும், அமெரிக்க மக்கள் அனைவரும் வாழ்த்துகிறோம். மானுடத்தின் மதிப்பை உயர்த்த பாடுபடும் ஒவ்வொருவருக்கும் இந்த விருது வெற்றியை தேடி கொடுத்துள்ளது. இளம் வயதினரின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் காக்க வேண்டிய அவசர தேவை இருப்பதை உணர்ந்து நோபல் பரிசு கமிட்டி, இந்த விருதை மலாலாவுக்கும், கைலாஷுக்கும் அளித்துள்ளது.

சிறுவர்களுக்கு கடவுள் கொடுத்த திறமையை முழுமையாக பயன்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மலாலாவும், கைலாஷும் இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியானவர்கள். வெறும் பதினேழே வயதில், உலகிலுள்ள மக்களை தன்பக்கம் திருப்பியவர் மலாலா. தாலிபான்கள் அவரது குரலை ஒடுக்க முற்பட்டபோது, தனது வலிமையால், அவர்களின் கொடுமைகளுக்கு பதிலடி கொடுத்தவர் மலாலா.
கைலாஷ் சத்யார்த்தியை பொறுத்தளவில், தனது மொத்த வாழ்நாளையும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார். அவருக்கு இதுவரை எந்த விருதும் கிடைக்கவில்லை என்பதை வைத்து அவரது பணியை மதிப்பிடக்கூடாது. ஆனால் கைலாஷால் விடுதலையும், மரியாதையும் பெற்று வாழும் பல ஆயிரம் பேரின் நன்றியைத்தான், இவருக்கான அளவுகோலாக பார்க்க வேண்டும்.

மலாலாவும், கைலாஷும், தங்களது உயிரையை பணையம் வைத்து வருங்கால சந்ததிக்காக உழைத்துள்ளனர். இருவருமே வெவ்வேறு நாடுகளில் இருந்தும், வெவ்வேறு மதங்களில் இருந்தும், வெவ்வேறு தலைமுறையிலும் இருந்து வந்தவர்கள். ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி. ஆனால் இருவருமே மனிதர்களுக்கான குறைந்தபட்ச மரியாதை, நீதியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். இவ்வாறு ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications