ஈரானில் எங்க மக்களையும் காப்பாத்துங்க.. இந்தியாவிடம் மன்றாடிய இலங்கை - நேபாளம்.. மத்திய அரசு அதிரடி
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் போர் நடந்து வருகிறது. ஈரானில் தவிக்கும் மக்களை மத்திய அரசு ‛ஆபரேஷன் சிந்து' மூலம் பத்திரமாக மீட்டு வருகிறது. ஆனால் இலங்கை, நேபாளத்தை சேர்ந்தவர்களை அந்த நாட்டு அரசால் மீட்க முடியவில்லை. இதனால் தங்கள் நாட்டு மக்களையும் பத்திரமாக ஈரானில் இருந்து மீட்க இந்தியாவிடம் நேபாளம், இலங்கை நாடுகள் கூறியுள்ளன.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் போராக மாறியுள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேல், ஈரான் நாட்டில் உள்ள சொந்த நாட்டு மக்களை ஒவ்வொரு நாடுகளும் அவசரஅவசரமாக வெளியேற்றின. இந்தியாவை சேர்ந்த மக்களும் ஈரானில் இருந்து வெளியேறி அண்டை நாடான அர்மேனியா வந்தனர்.

இதையடுத்து ‛ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை மூலம் அர்மேனியாவில் இருந்து இந்தியர்கள் விமானத்தில் மீட்கப்பட்டனர். அதன்பிறகு நேற்று ஈரான் நம் நாட்டுக்காக மூடிய தனது வான்வெளி பரப்பை திறந்தது.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடியது. இதனால் ஈரானில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து ஈரானுக்குமான விமான சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் பலரும் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் இருந்தனர். இதையடுத்து நம் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கா ஈரான் தனது வான்வெளியை நேற்று திறந்தது. 1000 இந்தியர்கள் ஈரானில் இருந்து அடுத்தடுத்து விமானங்களில் டெல்லி வந்து இறங்கி வருகின்றனர்.
இன்னும் பல நாட்டு மக்கள் ஈரானில் தவித்து வருகின்றனர். போர் தீவிரமாகி உள்ளதால் அவர்களை மீட்பதில் பிரச்சனை உள்ளது. அந்த வகையில் இலங்கை, நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஈரானில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஈரானில் தவித்து வரும் இலங்கை மற்றும் நேபாளை சேர்ந்தவர்களையும் இந்தியா மீட்டு வர முடிவு செய்துள்ளது.
ஈரானில் தவிக்கும் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை அவர்களால் மீட்க முடியவில்லை. இதனால் நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை மூலம் மீட்க வேண்டும் என்று இலங்கை, நேபாளம் நாடுகள் நம் நாட்டுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரானில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக‛‛ நேபாளம், இலங்கை நாடுகளை சேர்ந்த அரசின்கோரிக்கையை ஏற்று இந்திய தூதரகம் ஈரானில் இருந்து அந்த இருநாடுகளின் மக்களையும் பத்திரமாக மீட்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications